சொர்க்கமே என்றாலும்……..
இதனால் எல்லா பெரியவங்களுக்கும், நண்பர்களுக்கும், நண்டு சிண்டுகளுக்கும் சொல்லி கொள்வதென்னவென்றால்….. சொர்க்கத்தை மிஞ்சிய இந்தியாவுக்கு நாங்கள் செல்வதால் ஒரு மாதத்திற்க்கு உங்களுக்கு நிம்மதியா இருக்கலாம்.
**************************
நான் கண்மணியிடம், “கண்மணி…. நாம தாத்தாவை இங்கேயே வச்சிக்குவோமா”
கண்மணி சந்தோஷமாக தலையாட்டியபடியே ” தாத்தா நம்மகூடவே இருக்கட்டும்மா”
தாத்தா கடகடவென்று சிரித்தபடி “கண்மணி இங்க எனக்கு வீட்டில் இருந்தால் போர் அடிக்கும். அதனால எனக்கு ஒரு வேலை பார்த்துகொடு… அப்ப நான் இருக்கிறேன்”
கண்மணி , ” அதெல்லாம் நான் பார்த்தாச்சி தாத்தா“
“என்ன…… அதுக்குள்ள பாத்திட்டியா? என்ன வேலை“
“நீங்க வேலைக்கு… ஆபீசுக்கு எல்லாம் போகவேண்டாம்…. எனக்கக்கூட எப்பவும் பேசிட்டே இருங்க. அதான் உங்க வேலை“
தாத்தாவுக்கு சிரிப்பு தாங்கமுடியவில்லை.
Ok Bye… Bye Friends.
4 comments ஜூலை 16, 2009
எனக்கும் சீரியஸா பேசத்தெரியும்.
ஒவ்வொருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவிதமான பிரச்சனைகள். வீட்டுக்குள் போய் பார்த்தால் தான் தெரியும். அதையும் தாண்டி தான் ஒவ்வொருத்தரும் வாழ்க்கையில் போராடி நொந்து நூலாகி முத்தெடுக்கிறார்கள்.
ஆனால் இந்த போராட்டம் இல்லையென்றால் வாழ்க்கையில் ருசியே இருக்காது. சாபமாக மாறிவிடும்.
கண்மணி சில சமயங்களில் எதையாவது இண்டு இடுக்கில் வளைந்து நெளிந்து எடுக்க முயற்சிப்பாள். நான் அய்யோ பாவம் என்று எடுத்து கொடுத்தால் உருண்டு புரண்டு அழ ஆரம்பித்துவிடுவாள். திரும்பவும் நான், அதை அந்த இடத்தில் வைத்தால் தான் அவளுக்கு நிம்மதி வரும். திரும்பவும் அதை விடாபிடியாக முயற்சி செய்து எடுத்தபிறகு ஒரு வெற்றி சிரிப்பு சிரிப்பாள் பாருங்கள்…. அது தான் சந்தோஷம்.
இந்த மாதிரி குணம் பொதுவாக நிறைய குழந்தைகளிடம் இருப்பதை பார்க்கலாம். அப்புறம் வளர வளர அந்த மாதிரி குணங்கள் எல்லாம் எங்கே யாரால் தூக்கி எ|றியப்படுகிறது? எதற்கெடுத்தாலும் அம்மா தான் செய்யவேண்டும், அப்பாதான் செய்யவேண்டும் அது அவர்கள் கடமை மாதிரி நமக்கு நினைப்பு வந்துவிடுகிறது. அவங்க செய்யாவிட்டால் அவ்வளவுதான்…. ஒரே கூப்பாடு… கோபம்…
சின்ன சின்ன போராட்டங்கள் தான் வாழ்க்கையின் சுவாரஸ்யத்தை கூட்டுகிறது. வளர வளர பிரச்சனைகளும் பெரிதாக வளர ஆரம்பித்துவிடுகிறது பெரிய சவாரஸ்யங்களை தருவதற்காக. இது தான் இயற்கையின் நியதி.
என் வீட்டுக்காரர் அடிக்கடி சொல்லுவார், ‘சைக்கிளில் போயிட்டிருக்கும் போது கீழே விழுந்தால் கொஞ்சமா அடிபடும் . அதுவே பைக்கில் போகும் போது விழுந்தால் இன்னும் கொஞ்சம் பலமா அடிபடும். இன்னும் மேல போய் விமானத்தில் போயிட்டிருக்கும் போது விழுந்தால் நான் சொல்லவேண்டியதில்லை. அது போல காசு, பணம், படிப்பு என்று எல்லாவற்றிலும் மேலப் போகணும் என்று ஆசைப் படுவது நல்லது, அதே நேரத்தில் பிரச்சனைகளும் பெருசாத்தான் வரும். அதை எதிர்கொள்வதற்கும் நீ தயாரா இருக்கணும்’ (எனக்கு இதெல்லாம் அப்பவே தெரியும்… அதனாலத் தான் ரெம்ப படிக்கெல )
சில நேரங்களில், ‘என்ன இது சும்மா ஏதாவது ஒண்ணு கெடக்க ஒண்ணு வந்து உயிரை வாங்குது.. ஒரு முடிவே கிடையாதா’ என்று மனது சோர்ந்து போகும் போது புத்தகங்கள் , நண்பர்கள் வாயிலாக நாம் நம்மை புதிப்பித்து கொண்டு மீண்டும் தயாராக வேண்டும். கோடைக்காலத்தில் பாருங்கள் மரங்களில் உள்ள இலை எல்லாம் உதிர்ந்து பார்ப்பதற்கு காய்ந்து போய் நின்றாலும் , அதனுள் நம்பிக்கை என்ற வேர் உயிரோடிருக்கும். மீண்டும் மழை வந்தவுடன் ஜெகஜோதியாக பூத்து குலுங்கும்.
சரி ரெம்ப சீரியசா பேசிட்டேனோ? ம்….. என்ன செய்ய சில நேரங்களில் இதுவும் அவசியமாகிவிடுகிறது. அதனால சின்ன சின்ன விஷயங்களில் கிடைக்கும் சந்தோஷங்களை விட்டுடாதீங்க. மனம் விட்டு சிரியுங்கள், வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொள்ளலாம்.
21 comments ஜூலை 9, 2009
தாத்தா…..வந்துட்டாங்க….
கல்யாண வேலைகளால் வீடே கசகசவென்றிருந்தது. நாளைக்கு கோவில்பட்டியிலிருந்து எல்லோரும் கிளம்புவார்கள். அடுத்த நாள் கல்யாணம். நான் இன்னும் இரண்டு நாளில் கணவராகப்போகும் என் பாண்டியர் 6 மாதமாக எழுதித்தள்ளிய கடுதாசிகளை மறுபடியும் ஒருதடவை வாசித்து அரைலூசு மாதிரி தன்னாலே சிரித்தபடி அலைந்துகொண்டிருந்தேன்.
தொலைப்பேசி தொல்லைபேசியாக என் சிரிப்பை கலைத்தது.
“சொல்லுங்க”
“நான் கோவில்பட்டியிலிருந்து பேசுறேன், பெரியவங்க யாராவது இருக்கிறாங்களா?”
“இல்லைங்க. மண்டபம் வரைக்கும் போயிருக்காங்க. என்னன்னு சொல்லுங்க. நான் அவங்ககிட்ட சொல்லிக்கிறேன்”
“நான் பண்டியனோட தாத்தா பேசுகிறேன்ம்மா. செய்தி கொஞ்சம் அவசரம் அதனால உன்கிட்ட சொல்ல வெண்டியதா இருக்கு. இங்க…. நெலம கொஞ்சம் மோசமா இருக்கு…. நம்ம பாண்டியனோட அம்மா அதான் உன் அத்தை… தவறிட்டாங்க…. உங்க அப்பாகிட்ட கல்யாணத்தை பற்றி கொஞ்சம் பேசணும். ம்…. அதனால அப்பா வந்தவுடன் பேசச்சொல்லு சரியா”
”ம்…” என்றேன் உயிரே இல்லாமல். அத்தை, என் மீது மிக பிரியத்துடன் பழகி, என் கணவரின் சிறு வயது சேட்டைகளை சொல்லி மகிழ்ந்து… வாரத்திற்க்கு ஒரு தடவையாவது தொலைபேசி…. அடிக்கடி என்னை பார்க்க என் வீட்டிற்க்கும் வந்து பாசத்தில் நனையவைத்து…. என்னால் ஜீரணிக்க முடியவில்லை.
எப்பொழுது அம்மா அப்பா வீட்டிற்க்கு வந்தார்கள், எப்ப அப்பா பேசினார்கள், எப்படி கல்யாணத்தை நிறுத்தினார்கள், எப்படி விஷயம் காட்டுத்தீ போல் பரவியது, என்று எனக்கு தெரியாது. நான் மலைத்து போய் நின்ற அரைமணிநேரத்தில் எல்லாமே முடிந்துவிட்டது. அம்மாவின் முகமோ பேயறைந்தார்ப்போல் மாறிவிட்டது. என்னுடைய உணர்ச்சிகளை விட அதிகபடியான கவலை, அம்மாவை எப்படி சாமாளிப்பது என்பதுதான்.
எத்தனை வயசானாலும் பிள்ளைகளுக்கு பெற்றோர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாத ஒன்று. அவர்களின் கஷ்டம் தெரிந்திருந்தாலும், பெண்வீட்டார்களின் பாடும் குறைந்தது இல்லை. அடுத்தவர்களின் / சொந்தபந்தங்களின் வேறுப்பேத்துகிற பேச்சுகளும்…. பார்வைகளும்… இதிலிருந்து எப்படி என் அம்மா அப்பாவை காப்பாற்றப்போகிறேன் என்று எனக்கு புரியவேயில்லை.
திரும்பவும் தொலைபேசி சிணுங்கியது. நானே போய் எடுத்தேன்.
” நான் பாண்டியன் பேசுகிறேன்”
“ம்…. சொல்லுங்க”
அம்மாவிற்க்காக வருத்தம் தெரிவித்தபிறகு,
“பாரும்மா… நீ என்னுடைய மனைவி என்று 6 மாதத்திற்க்கு முன்னாலே முடிவுசெய்தவொன்று. அதில் எந்த மாற்றமும் இல்லை… ஆனா…. எங்க வீட்டில் இருக்கும் நிலமையை உனக்கு நான் தனியாக விளக்க வேண்டாம். அதனால யாரு என்ன பேசினாலும், பயப்படாதே. நீ தான் உங்க அம்மா அப்பாவிற்க்கு ஆறுதல் சொல்லி அவர்களையும் கவலைப்படாமல் இருக்க செய்ய வேண்டும்“
என் கணவர் எத்தனையோ காதற்கடிதங்களையும், கவிதைகளையும் எனக்கு எழுதியிருக்கிறார் (கல்யாணம் நிச்சயம் செய்தபிறகு), ஆனால் இந்த வார்த்தைகள் தான் எனக்கு அவருடைய உண்மையான நேசத்தை உணர்த்தியது. அடுத்த வாரத்தில் எங்கள் திருமணம் நடந்து அவங்க வீட்டிற்க்கு சென்றபோது, என்னுடைய மாமாவோ ஒரு படி மேலே போய், “என் மனைவி அவளை மாதிரி ஒரு பெண்ணை வீட்டிற்க்கு வரவழைத்தபிறகு தான் அமைதியாக சென்றிருக்கிறாள்” என்றார்.
இத்தனை பண்பட்ட உள்ளமுடைய என் மாமா எங்க வீட்டிற்க்கு வந்திருக்காங்கங்க. எனக்கு சந்தோஷமாக இருக்கிறது, கண்மணிக்கோ காலு தரையிலே நிற்கமாட்டேங்கிறது. மூன்று மாதம் விசா கிடைத்தாலும், மூன்று வாரம் தான் இருப்பேன் என்றதால் ரெம்ப வருத்தம் இருந்தாலும்…. சரி இருப்பது வரை சந்தோஷமாக கொண்டாடுவோம் என்று நினைத்துகொண்டேன்.
டிஸ்கி: ஆனா எங்க மாமாவுக்கு என்னை ரெம்ப பிடிக்கும் என்பதால் என் வீட்டுக்காராருக்கு பயங்கர பொறாமை. எப்பவும் கடவுளே இந்த கொடுமைகாரியின் உண்மையான சொரூபத்தை என் அப்பாவிற்க்கு இப்பவாவது காட்டு என்று ஒரே செபம். நாங்க எல்லாம் உஷார்பார்ட்டிங்கன்னு அப்பப்ப மறந்துவிடுகிறார் என் அப்பாவி கணவர்.
37 comments ஜூலை 1, 2009
அரபி பாட்டு..
அஞ்சி வருசமாயிடுச்சி நான் இந்த வேலையில் சேர்ந்து. என்னுடன் வேலை பார்க்கும் ஒருவருடன் தான் நான் தினமும் வருவதும் போவதும். இதென்ன பெரிய விஷேசம் என்று ஈசியா நினைக்காதீங்க. அவருக்கு(Egyptian) பிரெஞ்சும், அரபிக்கும் தான் தெரியும். எனக்கு பிரெஞ்சி சுத்தமா தெரியாது அரபியில் ‘சலாமலைக்கும்’ மாத்திரம் தான் தெரியும்.
காலையில் எங்க வீட்டுக்கு பக்கத்தில் வந்து ஒரு மிஸ்டு கால் கொடுத்தால் வெளியே வருவேன். ஆபீஸ் விட்டு வெளியெ வரும்போது இன்னொரு மிஸ்டு கால் கொடுத்தால் , நானும் வெளியே வருவேன்.இப்படி என் வாழ்க்கையில் ‘மிஸ்டு கால்’ பெரிய கம்யூனிக்கேஷன் டூலாயிடுச்சி.
அவசரத்து ஏதாவது சொல்லணும்ன்னா என்ன செய்வ கொஞ்சம் அரபி படிச்சிக்கோ என்று என் வீட்டுக்காரர் ரெம்ப வற்புறுத்தும் போது , படிக்கணும்ன்னு ஒரு வெறி வரும்… ஆனா என்ன பண்ண ‘சலாமலைக்கும்’ ஒன்று தான் கடைசியில் நிக்குது. அதனால் நான் அதை தண்ணி தெளிச்சி விட்டுட்டேன்.
எப்பவும் காரில் ஏறியவுடன் கண்ணை மூடிக்கொண்டு ஏதாவது கனவுலகிற்க்கு போய்விடுவேன். அப்படியே இன்றும் , கண்களை மூடிக்கொண்டு ஏதேதோ நினைத்து கொண்டிருந்தேன். திடீரென்று அவருடைய ரேடியோவில் ஒரு பாட்டு ரெம்ப மியூசிக்கில்லாமல், கட்டை குரலில் ஆரம்பித்தது. வண்டி ஓட்டிக்கொண்டிருந்தவரும் அதே மாதிரி பேச(பாட) ஆரம்பித்தார். நான் இவருக்கு இதென்னா புது ஆசை என்று கண்ணை மூடிவைத்து கொண்டே சிரித்துவிட்டு, கண்ணை திறந்து பார்த்தால்….. அவர் முன்னாடி போனக் காரை பார்த்து அப்படி முகம் சிவக்க காரசாரமாக திட்டிக்கொண்டிருந்தார். அதிலும் என்னுடைய சிரிப்பை பார்த்த பிறகு……….
ச்ச…. எப்படியாவது கொஞ்சம் சீக்கிரம் அரபி படிக்க வேண்டும்.
*************************************************
கண்மணியோட முதல் பேவரைட் சினிமா ‘திருவிளையாடல்’ ( நடிகர் திலகம் சிவாஜி நடித்தது).
அதில் சாவித்திரி அவர்கள் பாடும் பாட்டு ‘ஏலேலோ…’ என்ற பாட்டு ரெம்ப பிடிக்கும்.
அந்த பாட்டு வரும்போது நான் கூட சேர்ந்து மெல்ல பாடினா,
“அம்மா சும்மா சத்தம் போடாதீங்க, அக்கா பாடுறாங்கயில்ல” என்கிறாள்.
அப்புறம், சக்தே, பென்கரில் குதிரை பந்தயம், தெரசா என்ற பட்டியலில் இப்போது சேர்ந்த படம் ‘பசங்க’. அதில் என்ன புரியுதோ தெரியல ஆனா விழிந்து விழுந்து சிரிக்கிறா. அவளுக்கு நான் அந்தப் படத்தை போட்டுவிட்டு அவள் முகத்தில் வரும் சிரிப்பையும், expression யும் ரசிப்பதே என்னுடைய பொழுது போக்கு.
26 comments ஜூன் 17, 2009
எனக்கும் தத்துவத்துக்கும் ரெம்ப தூரம்.
கடவுள் ஒரு நாள், சோர்ந்து போயிருந்த ஒரு மனிதனை பார்த்து ,
“நண்பனே, இந்த மலையை பிடித்து தள்ளேன்” என்றார்.
அவனும் பிடித்து தள்ள ஆரம்பித்தான். இரண்டு நாள் ஆனது , நாலு நாள் ஆனது, ஆனால் மலையோ கொஞ்சமும் நகரவில்லை. கடைசியில் கடவுளின் மேல் கோபம் வர, அவரை திட்டிகொண்டான்.
அவனுடைய கோபத்தை பார்த்து கடவுள் திரும்பவும் அவனிடம் வந்தார்.
“கடவுளே.. என்ன இது…. நீங்க சொன்னீங்களேன்னு , மலையை பிடித்து தள்ளுனா, கொஞ்சமும் நகர மாட்டேங்குது. என்னிய வச்சு விளையாடுறீங்களா?” என்று கோபமாக கேட்டான்.
கடவுளோ புன்னகையுடன், “நண்பனே உன்னுடைய கைகளையும், கால்களையும் இப்போது பார், எவ்வளவு வலிமையாகிவிட்டது. உன்னை வலுப்படுத்துவதற்காகவே மலையை பிடித்து தள்ள சொன்னேன். அது நகர்ந்து ஒன்றும் ஆகப்போவதில்லை. அதனால் அதை பற்றி கவலைகொள்ளவும் வேண்டாம்… கோபப்படவும் வேண்டாம்” என்றாராம்.
என் மனதை தொட்ட இந்த கதை கோவிலில் பாதிரியார் சொன்னதுங்க. துன்பங்களும் , இழப்புகளும் நம்மை வலுப்படுத்துவதற்க்கும், நல் வழிப்படுத்துவதற்கும், உண்மைகளை தெளிவாக கண்டுகொள்வதற்காகவும் தான். நம்பிக்கையோடு முழு மனதோடு ஏற்றுக் கொண்டால், நமது வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.
தத்துவம் எல்லாம் இல்லைங்க. நம் கையை மீறி சில/பல விஷயங்கள் நடக்கும் போது எனக்கு நானே கூறிக்கொள்ளும் ஆறுதல்.
(சரி அப்படி என்ன விஷயம் இப்ப நடந்து போச்சுன்னு எல்லாம் கேட்கக்கூடாது. சின்ன சின்ன விஷயத்துக்கே, பெரிய பில்டப் எல்லாம் கொடுத்து பெரிய ரேஞ்சில உக்காந்து கவலைபடும் என்னை மாதிரி வீராங்கனைகளுக்கு தான் இந்தப்பதிவு.)
26 comments ஜூன் 10, 2009
என்னை பற்றி சில….
இந்த தொடரை எதுக்கு ஆரம்பிச்சாங்கன்னு தெரியல. என்னை பற்றி, நான் எழுதுவதை படித்து வதை படவேண்டும் என்ற உங்கள் விதியை எப்படி மாற்றமுடியும். வேலை பழுவிலும், முகுந்தன் 32 கேள்விக்கு பொறுமையா பதில் சொல்லியிருப்பதாலும், சுயமா சிந்தித்து எழுதுவதற்க்கு ஒன்றும் இல்லாததாலும் உங்களை கஷ்டப்படுத்துவதை தவிர்க்க முடியவில்லை.சரி இதோ கேள்வி பதில்….
1.உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
என்னோட உண்மையான பெயரை ஒரு பாதிரியார் வைத்தார். இந்தப் பெயரை நானாக வைத்து கொண்டது (பொன்னியின் செல்வன் தாக்கத்தினால்). எனக்கு என் பெயர் ரொம்பவே பிடிக்கும்.
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
(பொதுவாக, பெண்களிடம் இந்த கேள்வியை கேட்கக்கூடாதுங்க. )
அம்மாவின் மரணத்தை நினைக்கும் போதெல்லாம் அழுதுவிடுவேன். இந்த பிளாக் எழுத ஆரம்பித்ததே அந்த வேதனையை மறக்கத்தான்.
3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
என்னோட தோழியின் கையெழுத்தும் என்னோடதும் ஒரே மாதிரி இருக்கும். அதனால் ரெம்பவே பிடிக்கும்.
4.பிடித்த மதிய உணவு என்ன?
ம்… எங்கம்மா வைக்ககூடிய மீன் குழம்பு, கருவாட்டு குழம்பு. அப்புறம் கல்யாண வீட்டில் வைக்கும் சாம்பார், அவியல்.
5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
நல்ல பழகுவேன். ஆனால் அப்புறம் அவங்க பழக்கத்தை பொறுத்து நட்பு தொடரும்.
6.கடலில் குளிக்க பிடிக்குமா….அருவியில் குளிக்க பிடிக்குமா?
எந்த நீர் நிலையிலும் குளிக்கப் பிடிக்கும். குளத்தில் நீந்தி குளிப்பதென்றால் இன்னும் பிடிக்கும்.
7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
சிரிப்பு, கண்கள். மனதார அன்பா ஒரு சிரிப்பு சிரித்தாலே கவுந்திடுவேன்.
8.உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடித்த விஷயம் எல்லோரையும் நல்லவர் என்று ஓவரா நம்பி பழகுவது. பிடிக்காததும் அதுவே.
9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
அப்படியே எங்கம்மா மாதிரி எப்பவும் என்னை விரட்டிகொண்டு இருப்பது(பிடித்ததும் அதுவே பிடிக்காததும் அதுவே).
10.யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
என் அம்மாவும் அப்பாவும். என் கண்மணியை பார்த்த பிறகு தான் என்னை விட்டு பிரிந்தார்கள் என்றாலும்….. அப்பப்ப எனக்கு யாருமே இல்லை என்கிற எண்ணம் வந்துவிடுகிறது.
11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்?
ஆரஞ்ச், சிகப்பு நிறம் கலந்த சுடிதார்.
12.என்ன பார்த்து//கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
என்னங்க இது, பிரவுசரைப் பார்த்துக் கொண்டு தான் இதை எழுதுகிறேன். ஆபீசில் எதுவும் கேட்க விடமாட்டார்கள்.:)
13.வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
வெளிர் நீலம்.
14.பிடித்த மணம் ?
மல்லிகை பூ வாசம். மழைக்கு முன் வரும் மண் வாசமும் பிடிக்கும்.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன ?
பாசக்கார தம்பிங்க. அவங்களை எல்லாம் தைரியமாக நாட்டாமை பண்ணலாம்.
16.உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
அவர் அவருடைய கேஷவ் பற்றி எழுதியது பிடிக்கும். அப்புறம் நிறைய ஜோக் எழுதுவார் அதுவும் பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
கூடை பந்தாட்டம், கொக்கோ, வாலிபால் என்று விறுவிறுப்பாக செல்லும் எல்லா விளையாட்டும் பிடிக்கும். கிரிக்கெட் பிடிக்கவே பிடிக்காது.
18.கண்ணாடி அணிபவரா?
அணிய பிடிக்காது. ஆனால் அது இல்லாம ஹி…ஹி … எதுக்கு ரிஸ்க் எடுக்கணும்.
19.எப்படிப் பட்ட திரைப் படம் பிடிக்கும்?
நகைச்சுவைப் படங்கள் ரொம்ப பிடிக்கும்.
20.கடைசியாகப் பார்த்த படம்?
யாவரும் நலம்.
21.பிடித்த பருவ காலம் எது?
வசந்த காலம்.
22.என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
இப்பதைக்கு ஒன்றும் இல்லை.
23.உங்கள் டெஸ்க்டொப்ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
வேற வேலை இல்ல…..
24.பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது – என் குழந்தையின் சிரிப்பு சத்தம்.
பிடிக்காதது – அழுகை சத்தம், என் கணவர் கோபத்தில் பேசும் சத்தம்.
25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
குவைத்.
26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
தப்பு செஞ்ச விஷயத்திற்க்கு அடிவாங்கினதில்லை. ஆனால் தப்பே செய்யாத விஷயத்திற்க்கு நிறைய வாங்கியிருக்கிறேன்.
27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
வேலை செய்து சாப்பிட வேண்டும் என்று எண்ணாமல் அடுத்தவர்களை எதிர்பார்ப்பது, நிறைவில்லாமல் அளவுக்கு மீறி ஆசைப்படுவது, அடுத்தவர்களை மட்டம் தட்டி பேசுவது.
28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
யார் மீதாவது/எந்த காரணத்திற்க்கு எனக்கு கோபம் வந்தாலும், அவர்களிடம் சண்டை போடமாட்டேன். என் வீட்டுகாரரிடம் தான் வந்து சண்டை போடுவேன்.
29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
என் வாழ்க்கையே தேசிய நெடுஞ்சாலையில் தானுங்க. என்னோட ஊரு நாகர்கோவில், மேற்படிப்பு திருச்சியில், வெலை சென்னையில், அப்புறம் கல்யாணம் கோவில்பட்டியில். இளநிலை பட்டப்படிப்பு படிக்கும் போது மதுரை, திருச்சி, சென்னைக்கு தான் சுற்றுலா சென்றோம், திருச்சியில் படிக்கும் போது கன்யாகுமரிக்குத் சுற்றுலா சென்றோம். இந்த கேள்வியை கேட்டா நான் ரெம்ப கடுப்பாகிவிடுவேன்.
30.எப்படி இருக்கணும்னு ஆசை?
இப்போது போல், எப்பவும் சந்தோஷமா இருக்கணும்ன்னு தான் ஆசை.
31.கணவன் செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
ஏதாவது ஒரு மெஷினை கொடுங்க சந்தோஷமாக வேலை பார்ப்பார்.
32.வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
வாழ்க்கை ஒரு விளையாட்டு. அதில் வெற்றி, தோல்வி, அடி, வேதனை, சிரிப்பு எல்லாம் இருக்கும். சந்தோஷமா விளையாடுங்கள்.
அப்பாடா, படிக்கும் போது கூட இவ்வளவு சின்சியரா பதில் எழுதியது கிடையாது. இனி, எதையும் தாங்கும் இதையம் படைத்த புவனேஷையும், என்ன எழுதலாம் என்று ரெம்பவே யோசித்து கொண்டிருக்கும் ஷ்ரிராமையும், ரெம்ப நாளாக வெளியே வராமல் ஒளிச்சி உக்காந்து கொண்டிருக்கும் பிரபுவையும் அழைக்கிறேன்.
58 comments ஜூன் 3, 2009
டைரி குறிப்பு – 3
இருள் சூழ்ந்த வீட்டினுள் தான் திருடன் நுளைவான். தீபம் ஏற்றிவைத்துள்ள வீட்டினுள் அவன் நுளையான்.
அதுபோல் விவேகம் என்னும் தீபம் உள்ள மனதினுள், கெட்ட இயல்பு என்னும் திருடன் நுளைய மாட்டான்.
17 comments மே 31, 2009
அம்மா வீட்டுக்கு போறேன்……
வெளியூர் அல்லது அம்மா வீட்டிற்கு செல்லும் போது பெண்களுக்கு இருக்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் வடிப்பது ரெம்ப கஷ்டமுங்கோ. அவ்வளவு ஏன் சும்மா ஒரு வீட்டிற்கோ அல்லது பூங்காவிற்க்கோ ஒரு இரண்டு மணி நேரம் சென்றாலே புத்தம் புது மலர்களாக மலர்ந்து விடுவார்கள். ஏன்னா….ம்…நிறைய காரணம் உள்ளுக்குள்ள வந்து கும்மியடித்தாலும் ஒரு சிலதை மாத்திரம் சொல்லுகிறேன்.
தங்கமணி ஊருக்கு போயிட்டா எப்படி எல்லாம் சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்று Sriram அவர்கள் எழுதியதால், நானும் நம்ம தாய்குலங்கள் சார்பா எனக்கு தோன்றியதை எழுதுகிறேன். பெண்களுக்கே உரிய தன்னடக்கத்துடன் கொஞ்சமா எழுதியிருக்கேன். தப்புகணக்கு போட்டுராதீங்க.
1. காப்பி போடு , டி போடு, அதை எடுத்திட்டு வாயேன்….. இதை எடுத்த தந்து விடுன்னு….. ஓயாமல் ஏவல் வாக்கியத்தையே கேட்டு இத்து போயிருக்கும் காதுக்கு கொஞ்சம் ஓய்வு கிடைக்கும். கூடவே நமக்கும்.
2. அமிர்தமாக சமைத்தாலும்…. என்ன காரம், உப்பு எல்லாத்தையும் அள்ளி போட்டு இதென்னா சாப்பாடு என்ற கூப்பாடு எல்லாம் கேட்டு நாம் பாடுபடாமல் பட்டாம் பூச்சிபோல் இருக்கலாம்.
3. நாம் இல்லாவிட்டால் லாண்டிரியிலும், நாம் இருந்தால் ” சட்டையை washing machineல் போட்டால் பாலிஷ் போய்விடும்மா அதனால கொஞ்சம் கையால் துவைத்து விடேன்” என்று மிளகாய் அரைக்கும் அம்மிகல்லாய் மாறாமல் நம் தலை தப்பும்.
4. சும்மா டி.வி. ரிமோட்டை வைத்துகொண்டு, சானல் ௦ஒன்றிலிருந்து……. ஐம்பது வரைக்கும் ,,,,, அப்புறம் ஐம்பதிலிருந்து …. ஒன்றிர்க்குமாக வலம் வந்து அவரும் பார்க்காமல்… நம்மையும் பார்க்கவிடாமல் கடுப்படிக்கும் கடியில் இருந்து விடுதலை கிடைக்கும்.
5. எப்பாவது கொஞ்சம் தோழியுடன் பேசலாம் என்று தொலைபேசியை எடுத்தவுடனே எப்படித்தான் மூக்கில் வியர்த்து மூளை அதிவேகமாக வேலை செய்து சடுதியில் நியாபகசக்தி பெருகுமோ தெரியாது…”யம்மா… கொஞ்சம் எனக்கு அவசரமா பேசணும்” என்று தொலைபேசியை நம்மிடம் இருந்து பிடுங்கும் அநியாயம் நடக்காது
6. அவங்க வீட்டிலிருந்து யாராவது வந்தால் ஆளுக்கு தகுந்தாற் போல் வளைந்து நெளிந்து இருக்கவேண்டிய அவசியம் இல்லாமல் கொஞ்சம் நம் இஷ்டம் போல் இருக்கலாம்.
இப்படி இன்னும் நிறைய அடுக்கி கொண்டே போகலாம்.
இப்படி எல்லாம் எனக்கு உண்மையை சொல்ல வாய் வந்தாலும், எனக்கு அப்படி எல்லாம் பேசி மற்றவர்களின் மனதை புண்படுத்துவது பிடிக்காது. ஏன்னா நான் ரெம்ப நல்ல பொண்ணுங்க. அதிலும் பெற்றோர்கள் பரலோக பிரஜைகளாகி விட்டதால் நமக்கு அந்த அனுபவமும் கிடையாது.
சரி, உனக்கு என்ன கஷ்டம்? எதுக்கு இந்த பதிவுன்னு கேள்வி வருதில்ல… அடிப்பதற்க்கும், பிடிப்பதற்கும் எனக்கு இருக்கும் ஒரே ஒரு ஜீவன் என் வீட்டுக்காரர் தான் , அவரை விட்டு பிரிஞ்சா எனக்கு அப்புறம் எப்படி பொழுது போகும்.
27 comments மே 24, 2009
கடலை…கடலை….
- Calcium – 93 mg
- Carbohydrate – 16.13 gm
- Copper – 11.44 mg
- Fat – 49.24 g
- Fiber – 8.5 gm
- Iron – 4.58 mg
- Magnesium – 168 mg
- Manganese – 1.934 mg
- Phosphorus – 376 mg
- Potassium – 705 mg
- Protein – 25.80 gm
- Sodium – 18 mg
- Water – 6.50 gm
- Zinc – 3.27 mg
சரி இதெல்லாம் எங்கே கிடைக்கும் என்று பார்க்கிறீர்களா. ஒரு 100 கிராம் கடலையில் தானுங்க.

* கடலையை வறுத்து கருப்பட்டியுடன் இடித்து சாப்பிடுவது நல்லது.
* ஆட்டுப்பாலுடன் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் நன்மை கிடைக்கும்.
* குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும் நல்லது, எலும்புகளும் வலுவடையும்.
* நிறைய வைட்டமின்களும், தாதுக்களும் இருப்பதால் பெண்கள் பேறுகலத்தில் தொடர்ந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
* உங்களை இளமையாகவும் வைத்துக்கொள்ளும்.
* கடலை போட்டால் மனது இளமையாக இருக்கும்(அப்படீன்னு ஒருத்தங்க சொன்னாங்க), கடலை சாப்பிட்டால் உடல் இளமையாக இருக்கும்.
அதனால கடலையை மூட்டை மூட்டையா வறுப்பதோடு நிற்காமல் அப்பப்ப கொஞ்சம் சாப்பிடுங்க சரிங்களா.
36 comments மே 6, 2009
திருட்டுதனமா ஒரு சீடி
இந்த சீடி கையில் கிடைத்து ஏறக்குறைய ஒரு மாதம் ஆகிவிட்டது, ஆனால் நான் இன்னும் இதை பார்க்கவில்லை. நேரமே கிடைக்கவில்லை , அப்படியே கிடைத்தாலும் யாராவது வந்து வந்து விடுகிறார்கள்… ம் … இன்னைக்கு எப்படியாவது பார்த்துவிடவேண்டும் என்று என் அறையின் கதவை அடைத்தேன்.
என் அறையில் கட்டில் அருகே வைத்திருந்த கணனியை உயிர்ப்பித்தேன். பாப்பா ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள்.
நான் என்னிடமிருந்த குறுந்தகடை வைத்த சப்தத்தில் , என் மனைவியிடமிருந்து மெல்லிய குரல் வந்தது,
“என்னப்பா பண்ணுறீங்க தூங்கலையா?”
“தூங்குறேன்…… நீ தூங்கு”
“தூங்கவிட்டாதானே… அதை முதல்ல அங்கிட்டாம தூக்கி போடுங்க சதா சர்வ காலாமும் அதோட என்ன தான் செய்வீங்களோ” தூக்கம் கலைந்த எரிச்சல் அதில் ஒட்டி இருந்தது.
“பேசாம படு தாயி… நான் கொஞ்ச நேரம் பார்த்துவிட்டு தூங்குகிறேன்”
“என்ன பார்க்கப்போறீங்க”
“ஆங்… அதெல்லாம் உனக்கு எதுக்கு… நீ அதை பார்க்க வேண்டாம்”
“என்ன… நான் பார்க்கவேண்டாமா? அது என்ன சீடி?”
“வேண்டுமென்றால் உனக்கு அப்புறம் சொல்லித் தருகிறேன்” என்றேன் நமட்டு சிரிப்புடன்.
“சொல்லித் தருவீங்களா….? “ பட்டென்று உறக்கம் கலந்து படுக்கையிலிருந்து எழுந்து உட்கார்ந்துகொண்டாள்.
“அப்படி என்ன சீடிப்பா பாக்கப்போறீங்க சொல்லுங்க”
“உனக்கு தேவையில்லாததை பற்றி நினைக்காம தூங்குமா” . இந்த பேச்சு ரெம்பவே அவளை உசுப்பேற்றி விட்டது என்று , அவள் விடுக்கென்று படுக்கையிலிருந்து எழுந்த வேகத்திலே தெரிந்தது.
நான் வேறு வழியில்லாமல் கணனி மானிட்டரை அமர்த்திவிட்டு , எழுந்து அவளை அங்கிருந்து நகர விடாமல் ,
“போய் தூங்கும்மா..”
“எனக்கு இப்ப நீங்க என்ன செய்றீங்கன்னு தெரியணும்..” என்று என்னை பிடித்து தள்ளிவிட்டு , வேகமாக முன்னேற… நான் தடுக்க.. ஒரு மினி சர்க்கஸ் பண்ணிவிட்டு தவ்வி கணனி திரையை உயிர்ப்பித்து விட்டாள். ஒரு நிமிடத்தில் நான் பார்த்துகொண்டிருந்ததை தெரிந்து கொண்டு கொலை வெறியுடன், அப்பாவியாய் முகத்தை வைத்து கொண்டு நின்ற என்னை நோக்கி ………………………….
’
’
’
சரி அப்படி என்ன சீடி பார்த்தேன் என்று கேட்கிறீங்களா… ஒண்ணுமில்லைங்க என் பாப்பாவோட பிறந்த நாள் சீடி தான் பார்த்தேன்.
41 comments ஏப்ரல் 20, 2009

