நளபாகமா?… பழிபாவமா?

                 இத்தனை வருஷம் ஆனப்பிறகும் நான் சாப்பிட கூப்பிட்டால் போதும் ஏதோ அனக்கோண்டாவுடன் விருந்திர்க்கு அழைப்புவிடுக்கிற மாதிரி என் வீட்டுக்காரர் ரெம்பவே பயப்படுவார். எல்லாம் என் சமையலை நினைத்து தான்.

                அதுக்காக எனக்கு சமையலே தெரியாது என்று நினைத்து விடாதீங்க. என் அம்மாவும் டீச்சராக இருந்ததால், நான் சிறு வயதிலேயே , அம்மாவுக்கு சிறு சிறு வேலைகள் செய்துகொடுப்பேன். அப்புறம்… எட்டாம் வகுப்பு படிக்கும் போதே, பொரியல், அவியல் என்று சின்ன சின்ன சமையலையும் செய்வேன். அப்புறம் அடையாறில் வேலை பார்க்கும் போது ஓரளவுக்கு சமையலையும் செய்திருக்கிறேன். இவ்வளவு முன் அனுபவம் இருக்கும் போது திருமணம் ஆன பிறகு எவ்வளவு முன்னேறியிருக்கவேண்டும்.

                       ஆனா பாருங்க ஒரு முன்னேற்றமும் கிடையாது. என்னுடைய தோழிகள் எல்லாருமே வாயில் நுழைவதற்க்கே கஷ்டப்படும் (பதார்த்தங்களை அல்ல)பெயருடைய அறுசுவை பதார்த்தங்களை எல்லாம் அசால்ட்டா செய்து அசத்தும் போது … நான் மாத்திரம் அதே சாம்பார், பருப்பு, பொரியல் என்று அல்லாடும்போது ரெம்பவே அவஸ்த்தையாக இருக்கும்(அது கூட அப்பப்ப காலைவாரிவிடும்).

                     முயற்ச்சி பண்ணுவது தானே என்று நீங்கள் எண்ணலாம். முயற்ச்சிபண்ணினேனே. நான் முதலில் ஒரு ஜவ்வரிசி வடை செய்து , அந்த அனுபவத்தை ஏற்கனவே எழுதியிருக்கிறேன். அதுபோல் சுசியம் செய்ய ஆரம்பித்து பொங்கலாகி… பின் பாயாசம் ஆனாது,   கேக் செய்ய ஆரம்பித்து பிஸ்கட் செய்தது, பிரியாணி செய்ய ஆரம்பித்து வெஜிட்டபிள் பொங்கலாய் முடித்தது என்று … ஏகப்பட்ட அழிச்சாட்டியம் பண்ணி என் வீட்டுக்காரரை எலியாக்கி கிலியை அதிகப்படுத்தியதுதான் மிச்சம்.

              அதை விட கொடுமை என்னவென்றால் என் தோழி(?) என் புலம்பலை கேட்டு விட்டு “எதுக்கு இப்படி கவலைபடுறீங்க… எவ்வளவு நல்லா சாம்பார் வைக்கிறீங்க… ஆம்லெட் போடுறீங்க… கடலை வறுக்குறீங்க…  சுடு தண்ணி வைக்கிறீங்க….” என்று ஆறுதல் சொல்லுறாங்க. என்னுடைய reaction னை பார்த்துவிட்டு “he .. he… நல்லப் பண்ணுறதை தானே சொல்லமுடியும்” என்று சிரிப்பு வேற.

              எனக்கு மாத்திரம் ஏன் இப்படி நடக்குது(அதுவும் திருமணமான பிறகு) என்று நிறைய நாள் , கிச்சன் எல்லைக்கே சென்று யோசித்துபார்த்தும்…. பதில் இல்லை. இப்படியே விட்டால் என்னாகிறது என்று கொஞ்சம் தீவிரமாக விசாரித்ததில் , அவங்க வீட்டில் கிடைத்த தகவல் இது.

சிறிய கொசுவர்த்தி.

******************

“அம்மா இதென்ன புதுசா செய்திருக்கீங்க”

“ஆமாப்பா உனக்கு பிடிக்குமேன்னு காலிப்ளவர் பஜ்ஜி செய்தேன் பிடிச்சிருக்கா”

“ம்…. ஆனா கொஞ்சம் காராம் அதிகமோன்னு தோணுது”

” உனக்கு காரமே பிடிக்காது என்று நான் காரமே போடல. அப்புறம் எப்படிடா காரம் வரும்” அம்மா காரமாக கேட்க ….

அதற்கு பதிலே இல்லை .

 —–

 ”உனக்கு பிடிக்குமேன்னு நார்த்தைங்கா ஊருகாய் பண்ணினேன், சாப்பிட்டு பாரேன்”

 சாப்பிட்டு பார்த்துவிட்டு, “ம்… கொஞ்சம் சீரகம் அதிகமாயிருக்குமோ”

 ”சீரகம் எப்படி இருக்கும் என்றாவது உனக்கு தெரியுமாப்பா” என்று நொந்து போய் கேட்க

 , “he….he….” என்ற சிரிப்பு தான் பதில்

. —–

           இப்படி ஏதாவது ஒரு குறையை கண்டிப்பாக சொல்லவேண்டும் என்ற தீவிரமான கொள்கையால் , ரெம்பவே டென்ஷனான அம்மா ஒரு நாள்,

       “டேய் (அம்மா கூப்பிட்டாங்க, நான் கூப்பிடுவேனா?) உனக்கு சமையலே வராத பொண்ணு தான் வந்து வாய்க்கபோறா பாரு” என்று சாபம் கொடுத்துவிட்டார்.

 ****************************

              அந்த வரத்தை வாங்கியவர் வேறு யாருமில்லை என் வீட்டுக்காரர் தான் என்று நீங்கள் சரியாக கணித்திருப்பீர்கள். இப்படியெல்லாம் வரம் வாங்கி… எனக்கு தெரிந்த சமையலைகூட என்னிடமிருந்து விரட்டிய புண்ணியம் பண்ணிவிட்டு , என்னிடம் அறுசுவை சமையலை எப்படி எதிர்பார்க்கலாம் ? நீங்களே சொல்லுங்க.

                  அதனால அம்மா சமையலை சும்மா சும்மா கேலி பண்ணாம ஒழுங்கா சாப்பிடீங்கன்னா, நளபாகம் செய்கிற நல்ல மனைவி கிடைப்பாங்க இல்லாட்டி…. என்னை மாதிரி அப்பாவி பொண்ணுங்களை இம்சை பண்ணுகிற பழி பாவம் தான் கிடைக்கும். உஷாரா இருந்துக்கோங்க..

Add comment நவம்பர் 12, 2009

ஒருவழியா திறந்துட்டாங்க….

 அப்பாடி ஒரு வழியா கண்மணிக்கு ஸ்கூல் ஆரம்பிச்சிட்டாங்க. கண்மணிக்கே விடுமுறை பயங்கர போர் அடித்துவிட்டது, முகமெல்லாம் சிரிப்பாக கிளம்பிட்டாங்க.

IMG_0058

 நீண்ட விடுமுறைக்கு அப்புறம் பள்ளிக்கூடத்துக்கு கிளம்புறாங்களே என்று விடுப்பு சொல்லிவிட்டு நானும் கூடப்போனால்,

 ”அம்மா நீங்க எதுக்கு என் கூட வர்றீங்க? நான் தனியா போயிக்குவேன்.” என்று கேள்வி கேட்கிறாங்க.
 
 ”பாப்பா, முதல் நாளு இல்ல… அதான் ,அப்படியே  உங்க டீச்சரிடமும் பேசலாமே என்று தான்”

 ”நான் ஒண்ணும் பாப்பா இல்ல. ” Big girl”. பெரிய அக்கவாயிட்டேன். இனிமே அக்கான்னு தான் கூப்பிடணும்” பயங்கர கண்டிப்புடன்.

 ”ஓ…. சரி சுண்’டக்கா’ “  

*************
  கண்மணி பள்ளிக்கூடத்துக்கு போயிற்று வீட்டுக்கு வந்தால் மணி ஒன்பதுதான் ஆகியிருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்தபோது, எங்களுடைய கடிதம் (திருமணத்திற்க்கு முன்னால் எழுதியது)நியாபகம் வந்தது. முன்னாடியெல்லாம், என் வீட்டுகாரருடன் அடிக்கடி சண்டை போடுவேன்( வேறு பொழுதுபோக்கு?). அப்புறம் அவருக்கு ரெம்ப கோபம் வந்துவிட்டால் போதும், உடனே அந்த கடிதங்களை எடுத்து சத்தம் போட்டு வாசிக்க தொடங்கிவிடுவேன். (கல்யாணத்துக்கு முன்னாடி எழுதின கடிதம் எப்படி இருக்கும் என்று நான் தனியாக சொல்லவேண்டியதில்லை)

  ரெம்ப நாள் ஆகிவிட்டது… அந்த கடிதங்களை எடுத்து வாசிக்க ஆரம்பித்தேன். எப்போதும் அவர் எழுதிய கடிதத்தை தான் வாசிப்பேன், இன்று நான் எழுதிய கடிதங்களையும் சேர்த்து வாசிக்க ஆரம்பித்தேன்.

  ஆனாலும் எனக்கு ரெம்பவே தைரியம் தான். என்னுடைய எல்லா கெட்ட பழக்கங்களையும் ஒரு கடிதத்தில் பட்டியல் போட்டு கொடுத்திருக்கிறேன். ம்… அன்று அந்த விஷயங்கள் எல்லாமே விளையாட்டாக இருந்தது , திருமணமானபிறகு அதெல்லாம் சீரியஸ்(!) விஷயமாகிவிட்டது. அப்படி நினைத்து கொண்டேனே தவிர… (இன்றும் அந்த கெட்ட பழக்கங்கள் எல்லாம் மாறாமல் அப்படியே தான் இருக்கின்றது).

   ரெம்ப நேரம் தனியாக சிரித்துகொண்டே இருந்தேன். என்ன தான் இமெயில், தொலைபேசி என்று வந்தாலும், கடிதங்களுக்கு இணையாகாது. நம்மையே புதுபித்துகொள்ள வைக்கும் சுவையான அனுபவம்

8 comments நவம்பர் 8, 2009

கோபப்படாதீங்க …..ப்ளீஸ்….

                மனிதர்கள் பலவிதம், பதிவர்கள் பலவிதம்… ஏன் பேய்கள் பலவிதம் என்று கூட நிறைய பதிவுகள் வரும்போது  நாமும் இப்படி ஏதாவது எழுதலாமா என்று ஒரு ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்தபோது.. திடீரென்று  நிலநடுக்கம் வந்த மாதிரி நான் இருந்த அறையே கிடுகிடுத்து விட்டது. என் எதிரில் இருந்த அரபி அம்மா படா கோபத்தில் (என்னிடம் அல்ல) கிறீச்சிட்டது தான் காரணம்.
  
               ஏன்? எதற்கு? என்று ஆராய்ச்சி செய்தால் நமக்கு தான் கோபம் வரும். சின்ன விஷயத்துக்கும் அப்படி ஒரு காட்டு கத்தல், எனக்கு ரெம்ப அநியாயமாகப்படும். இங்கு அடிப்படை உதவிகளை செய்ய இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், இந்தோனேஷியா முதலிய நாடுகளிலிருந்து தான் நிறைய பேர் வருவார்கள். அந்த ப்ளாக்கில் நான் மட்டும் தான் இந்தியா என்பதாலோ என்னவோ, அந்த பணிப்பெண்கள், அரபி பெண்களிடம் நன்றாக வாங்கிவிட்டு என்னை பார்த்து ஒரு சோகமான புன்னகையை உதிர்த்து விட்டு போவார்கள். எனக்கு ரெம்பவே கஷ்டமாகயிருக்கும்.

            எனக்கு தெரிந்து , இவர்கள் புகார் கொடுத்து , பணிப்பெண்களை மாற்றுவது ஒரு தொடர்கதையாகிவிட்டது. அதிலும்  எதுவும் செய்யாமலே திருட்டு பட்டம் கொடுக்கும் போது…. அழும் பணிப்பெண்களை பார்த்தால் சகிக்காது.

                       இவ்வளவு எழுதிவிட்டு கண்மணி எனக்கு தந்த பாடத்தை சொல்லாமல் எப்படி முடிப்பது.

                         ஒரு நாள் , தூங்குவதற்க்கு முன்னால் பல் விளக்க பயங்கரமாக அடம்பிடித்தாள். என்னென்னவோ சொல்லிப் பார்த்தும் கேட்கிற மாதிரி தெரியவில்லை. கடைசியில் பொறுமை இழந்து  நான் கொஞ்சம் கோபத்தில் அரட்டி, பிடித்து வைத்து பல் விளக்கி விட்டேன். பொதுவாக அப்படி கோபப்பட்டால், சிறிது நேரம் கழித்து மெள்ள அவளுக்கு புரிய வைத்து, அவளை சமாதானபடுத்திவிடுவேன். அவளும் புரிந்து கொள்ளுவாள். ஆனால் அன்று எனக்கு மகா கோபம் வந்து விட்டதால், அப்படியே படுக்கைக்கும் சென்று…. துங்குவதற்க்கு முன்னால்  சொல்லும் ஒரு செபத்தை  ஆரம்பித்தேன்.
 
  “இயேசப்பா உமக்கு நன்றி”

 கண்மணி  உம்மென்று முகத்தை வைத்து கொண்டு  “இயேசப்பா உமக்கு நன்றி”.
 
 ”இயேசப்பா  எனக்கு நல்ல ஞானத்தை தாரும்”

  கண்மணியின் கண்ணில் கண்ணீரூம் , முகத்தில்  கோபமும் கொப்பளிக்க, ” இயேசப்பா எனக்கு நல்ல அறிவை தந்திருக்காரு அதனாலத்தான் நான் நல்ல பிள்ளையா படிக்கிறேன், எழுதுறேன்(இப்பவெல்லாம் கண்மணி சமத்தா எழுதுறா) , உங்களிடம் தான் அது இல்லை அதனாலத்தான் நீங்க கோபப்படுறீங்க

10 comments அக்டோபர் 29, 2009

கண்மணி ரெம்ப அலர்ட் தான்.

“கண்மணி உங்க தாத்தாவோட சூட்கேச பாரு …. ரெம்ப பழசாயிடுச்சி”

“ஆமா… சீ…. ரெம்ப அசிங்கமாயிருக்கு” என்றாள் முகத்தை சுழித்துவிட்டு.

“ஒண்ணு செய்….. உங்க அப்பாகிட்ட சொல்லி  புதுசா ஒரு  சூட்கேஸ் தாத்தாவுக்கு வாங்கி விடலாம்.”

கொஞ்ச நேரம் யோசனை செய்துவிட்டு, ” வந்து….. நீங்க இப்ப சும்மா தானே இருக்கீங்க… ஒரு துணியை எடுத்து சூட்கேஸை நல்லா துடைங்க .. அப்போ அழகாயிடும்

*************************************

“பெரியம்மா.. இந்த பெட்டி கவர் கிழிஞ்சிருக்கு .. புதுசா ஒண்ணு வாங்கி போடுங்க”

“கண்மணி, பெரியம்மா கிட்ட காசே இல்லம்மா. நீ அப்பாகிட்ட கொஞ்சம் வாங்கி தர்றியா…. புதுசா வாங்கிக்கிறேன்”

ம்.. எங்க அப்பாகிட்டயெல்லாம் வாங்கவேண்டாம்…… நீங்க இந்த ஊசி நூலு இருக்கு பாத்தீங்களா … அத வச்சி தைங்க அப்போ சரியாயிடும்“.

**************************************

கண்மணி அப்பா: ” அம்மாடி நீ சாதாரண ஆளு கிடையாது…  கடையேழு வள்ளல்களில்… பாரி வள்ளல் பக்கத்தில் கண்டிப்பா உனக்கு ஒரு இடம் உண்டு. “

22 comments அக்டோபர் 14, 2009

நீங்க ரெடியா?

              பன்றிக் காய்ச்சல் இப்படி என் வாழ்க்கையில் விளையாடும் என்று நினைத்துகூட பார்க்கவில்லை. உடனே பன்றி காய்ச்சல் எனக்கு வந்துவிட்டதோ என்று பயந்துவிடாதீர்கள்.

              கண்மணிக்கு மூன்று மாதம் கூடுதலாக விடுமுறை கொடுத்து, மூன்று புத்தகத்தையும் கையில் கொடுத்து ‘முடிச்சிருங்க’ என்று அனுப்பிவிட்டார்கள். என்ன ஒரு ‘வில்லத்தனம்’ என்று நினைத்தாலும்…. இப்போது  உள்ள வில்லன்களை நினைத்தால் பரிதாபமாகத் தான் இருக்கிறது. கதாநாயகர்கள் அடிக்கிற பஞ்ச் டயலாக்கை நம்மளாலே தாங்கமுடியவில்லை… பாவம் அவர்கள்……..   ‘ தெரிச்சிடுவே….. நொறுங்கிடுவா…. தாங்கமாட்ட…சுருண்டிருவ… ‘ என்று பேசுவதை கேட்டு பரிதாபமாக முழிப்பவர்களை பார்த்து பரிதாப்படாமல் என்ன செய்ய. 

                  நம்ம கதைக்கு வருவோம்…வாரத்திற்க்கு ஒருமுறை எழுதவைப்பதற்க்கே , எங்களை தலை கீழாக நிற்கவைப்பாள். இப்போ தினமும் எழுதவைப்பதற்க்கு…… நினைக்கவே பயமாகயிருக்கிறது. இப்பதான் சிறு வயதில், வீட்டில் படிக்காம அப்பாவை எரிச்சல்படுத்தியது  அநியாயத்துக்கு நியாபகம் வந்துதொலைக்கிறது.

                கெஞ்சி…. கொஞ்சி அவளை ஒரு பக்கம் எழுத வைப்பதற்க்குள் ஒருவழியாகிவிட்டோம். அப்ப தான் எனக்கு தெரிஞ்சவங்க ஒருத்தங்க தொலைபேசினாங்க. அவங்களுக்கு  நான் ஆரக்கிள் சொல்லிக்கொடுக்க வேண்டுமாம். நான் கைவேலையாக இருந்ததால், எனக்கு பதிலாக கண்மணி அப்பா தான் பேசினார் ,”சரி , அதெற்கென்ன கண்டிப்பா தரோவா சொல்லி கொடுத்துவிடலாம்.  ஆனா நான் கேட்கிற பீஸை கரெக்டா தந்துடனும்” என்றார்.

   அவங்களும் ,” கண்டிப்பா….. எவ்வளவு தரணும்”

   கண்மணி அப்பா , ” பெரிசா ஒண்ணுமில்ல , கண்மணியை …. அவளோட வீட்டு பாடத்தை எழுத வச்சிடணும் அவ்வுளவுதான்

     அப்பதைக்கு அங்கிருந்து ஒரு சிரிப்பு  கேட்டது தான், அப்புறம் அங்கிருந்து  போனே வரவில்லை. நீங்க யாராவது ரெடியா?

10 comments அக்டோபர் 8, 2009

சுவாரசியமா எழுதுவாங்களே…….

   நான் ஊருக்கு போயிருந்த கேப்புல , டுபுக்கு அண்ணா  என்னிய சுவாரஸ்யபதிவர் பட்டியல்ல பெரிய மனசு பண்ணி கோத்துவிட்டிருந்தார். அண்ணாச்சிக்கு ரெம்ப நன்றி.  இப்ப நானும் நல்ல பிள்ளையா (எனக்கு ரெம்ப அறிமுகம் இல்லாத ) நாலு பேரை அறிமுகபடுத்தனும் இல்ல, தேடிப் பார்த்தா நிறைய பேரு அநியாயத்துக்கு அழகா எழுதி தள்ளி இருக்காங்க. மேலும் எல்லோரும் என்னை விட பதிவுலகிற்க்கு ரெம்பவே பழக்கமானவங்க தான்.

   1. இளவஞ்சி  :   இவருடைய பதிவுகளை படித்து கொண்டிருந்த போது, என்னுடன் வேலை பார்ப்பவர், ‘நீங்க தனியா சிரிக்கவேயில்லை’ என்று கிண்டல் பண்ணுகிற அளவுக்கு சிரித்துவிட்டேன். ஒவ்வொரு புகைப்படத்திற்கும் ரசிக்கும் படியான கமெண்டுடன் கலக்கி இருக்கிறார்.

 2.  ஜவகர்  :   இவருடைய   பதிவுகளை நான்  நிறைய   வாசித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். எப்படி தினமும் இவரால் எழுத முடிகிறது என்பது தான் எனக்கு புரியாத புதிர். ம… அதுக்கெல்லாம் ‘இது’ வேணும்.

இவங்க ரெண்டுபேரும்  எனக்கு ரெம்ப அறிமுகம் தான்:

 1. ஜானு   : கதை, கவிதை, சமையல், ஆன்மீகம் என்று எதையும் விட்டுவைக்காமல் ரவுண்ட் கட்டி எழுதுபவர். படிச்சிபாருங்க.

 2. நெஜம்மாவே நல்லவன் : நெஜமாவே நல்லவரோ இல்லியோ.. ஆனா நெஜமாவே சுவாரஸ்யமாக எழுதுபவர்.
 
   சரி நீங்களும் மறக்காம  நிறைய பேரை அறிமுகபடுத்துங்க.

3 comments அக்டோபர் 7, 2009

காதல், கடவுள், பணம் , அழகு – நான்

                   எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க பாருங்க. இந்த தலைப்பில் எழுத அழைப்பு விடுத்த புவனேஷுக்கு இது சமர்ப்பணம். 

 காதல்-

          காதல் இல்லாவிட்டால் அது என்ன வாழ்க்கைங்க. ஒவ்வொரு மனிதர்களையும் காதல் தானே வாழ வைத்துகொண்டிருக்கிறது. சிலருக்கு பணத்தின் மீது காதல், சிலருக்கு சமுதாய நலன் மீது காதல், அரசியல்வாதிகளுக்கு பதவியின் மேல் காதல், நடிகர்களுக்கு நடிப்பின் மேல் காதல், எனக்கு என் காணவரிடம் கொள்ளும் ஊடல்( இதை ‘சண்டை’ன்னு இன்டீசென்ட சொல்லுவாங்க) மீது காதல், புவனேஷுக்கு ஸ்டெல்லா மேரிஸ் காலேஜ் பொண்ணுங்க எல்லார் மீதும் காதல்( எம்மாம்…. பெரிய்ய்ய்ய்ய மனசு) …. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இப்ப சொல்லுங்க காதல் இல்லாத வாழ்க்கையில் என்ன சுவாரஸ்யம் இருக்கும்.

  கடவுள்-

       கடவுள் நம்முடைய மனதிற்க்குள் மனசாட்சி வடிவமாக இருக்கிறார். ரெம்ப ஓவராக அவருடைய பேச்சை கேட்காவிட்டாலும், ஓரளவுக்காவது கேட்டு கொஞ்சமாச்சும் நல்ல பிள்ளையா இருக்கணும் என்பது என்னுடைய ஆசை. அந்த ஆசை என்னைக்கு நிறைவேறப்போகுதோ தெரியவில்லை.

பணம்-

 ’ மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை

  தானம் தவர்உயர்ச்சி தாளாமை – தேனின்

  கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்

   பசிவந்திட பறந்து போம்’

 என்று ஒவையார் ‘நல்வழி’ யில் சொல்லியிருக்கிறார். மனிதனை மனிதனாக நிலைக்க செய்வதற்க்கும், நம்மையும் நம் சுற்றத்தாரையும் சந்தோஷமாக வாழவைப்பதற்க்கும் பணம் கண்டிப்பாக தேவைதான்.

      பணம் அதற்க்கு மேல் சேர்த்து வைத்திருப்பவர்கள் தான்  , அதிகமாக பணம் வைத்திருந்தால் என்னசெய்யவேண்டும் என்று ஐடியா தருவார்கள்..

அழகு –

      அழகு என்பதற்க்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அர்த்தம் இருக்கும். சிலருக்கு புத்திசாலித்தனம் தான் அழகு, சிலருக்கு அமைதி தான் அழகு, சிலருக்கு வீரம் தான் அழகு, …… இருந்தாலும் அழகு இல்லாத உயிர்களே கிடையாது. அந்த அழகுதான் நமக்கு அவர்கள் மேல் ஒரு பிடிப்பை உருவாக்கும். வேறு என்ன சொல்ல என்று எனக்கு தெரியவில்லை. ம்… எனக்கு பிடித்தமானவர்கள் எல்லாருமே என்னை பொறுத்தவரையில் மிக மிக அழகானவர்கள்.

            அப்பாடி ஒரு வழியா எழுதிட்டேன். இப்ப யாரை எல்லாம் கோத்துவிடலாம்…..

 1. ஷ்யாமா, இவரை நான் எந்த தொடர்லேயும் கோத்து விடாமல் எவ்வளவு பெரிய கொடுமை செய்திருக்கிறேன். அதற்க்கு மன்னிப்பை கேட்டு அழைப்புவிடுக்கிறேன்.

2. முகுந்தன் ஐயா, எப்படி நீங்கள் எங்களை எல்லாம் மறந்து நிம்மதியாக இருக்கலாம். வாங்க வந்து ரெண்டு வார்த்தை பேசிட்டு போங்க.

3. விஜய், காயத்திரி மந்திரம் தான் இவருக்கு ரெம்ப பிடிக்கும் இருந்தாலும், எந்த தலைப்பை கொடுத்தாலும் இவர் ரெம்ப சுவாரஸ்யமாக எழுதுவார்.

4.  பிரபு - அடிக்கடி காணாம போயிடுவார். அப்பப்ப பிடிச்சி இப்படி ஏதாவது வேலை குடுத்தாதான் சரிபட்டுவருவார்.

5 comments அக்டோபர் 3, 2009

எப்படி இப்படியெல்லாம்….

                 சமீபத்தில் சுஜாதாவின் ‘கடவுள் இருக்கிறாரா’ என்ற புத்தகத்தை வாசித்து கொண்டிருந்தேன். இதை பலர் படித்திருக்கலாம். அதில் ஒரு நிகழ்ச்சி குறிப்பிட்டிருந்தார்.

                  இரண்டாம் உலக யுத்தத்தின் போது , ஜெர்மன் லண்டன் நகரவீதியெங்கும் அலைலையாக குண்டுகளை அள்ளி தெளித்து கொண்டிருந்த ஒரு இரவில், சர்ச்சில் தன் டவுனிங் தெருவிலுள்ள வீட்டில் , மூன்று மந்திரிகளை உணவுக்கு அழைத்திருந்தார். விருந்து நடந்து கொண்டிருந்த போது, விமானத்தாக்குதல் தொடங்கியது. சாப்பிட்டு கொண்டிருந்த சர்ச்சில், திடீரென்று எழுந்து சமையலறைக்கி சென்று அங்கிருந்த சிப்பந்திகளிடம் “சாப்பாட்டை விருந்து நடக்கும் அறையில் வைத்து விட்டு , உடனே பதுங்கும் அறைக்கு பாதுகாப்பாக சென்றுவிடுங்கள் ” என்று ஆணைபிறப்பித்துவிட்டு திரும்பி வந்தார். மூன்று நிமிடம் கழித்து , விமானம் தாக்கி சமைலறை முழுவதும் நாசமாகி, சமையற்காரரும் , பணிப்பெண்களும் காப்பாற்றப்பட்டார்கள். அந்த நிமிஷத்தில் எழுந்து போய் அவர்களை வெளியே போகச்சொன்னது எது என்று பின்னால் அவர் வியந்தாராம்.

               என்னுடைய கண்முன்னே இது மாதிரி சம்பவங்கள் நடந்திருந்தாலும், சிலதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.

                எங்கம்மா பொதுவாக எதற்குமே நேரம் தவறமாட்டார். எங்காவது வெளியே கிளம்ப வேண்டுமானாலும் சரி, குறித்த நேரத்தில் அங்கு கிளம்பிவிடவேண்டும் என்பதில் குறியாக இருப்பார். ஒரு நாள் என்னுடைய அண்ணன் சென்னைக்கு மாலை நான்கு மணியளவில் கிளம்புவதாக இருந்தது. அம்மாவும் அதற்குள் பெர்மிஷன் கேட்டு பள்ளியிலிருந்து வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால் அன்று என்னவோ தோன்றவும், அடுத்த பேருந்தில் போனால் போதும் என்று பள்ளியிலிருந்து மெதுவாகவே வந்தார்கள். அண்ணாவுக்கோ பயங்கர கோபம் , நாலு மணி பேருந்தை பிடிக்க முடியாது என்று.கரகரவென்று முணுமுணுத்து விட்டு அடுத்த பேருந்தை பிடித்து தான் சென்றார்.

          மதுரை அருகில் சென்றுகொண்டிருந்தபோது , நெடுஞ்சாலையில் அண்ணா டிக்கெட் புக் பண்ணியிருந்த பேருந்து பயங்கரமாக சேதமடைந்து கிடந்ததையும், நிறைய பேர் படுகாயம் அடைந்ததையும், பலர் இறந்ததையும் பார்த்துவிட்டு அதிர்ந்து அடுத்த நாள் எங்களுக்கு போன் பண்ணினார். அன்று அம்மாவிற்க்கே எதற்காக மெதுவாக வந்தோம் என்று காரணம் சொல்லத்தெரியவில்லை.

                  அரபு நாடுகளில் வெள்ளிக்கிழமை தான் விடுமுறை. என் வீட்டுக்காரர் எல்லா வெள்ளிக்கிழமையும் தவறாமல் (உடம்பு சரியில்லாவிட்டாலும்) கோவிலுக்கு செல்லும் வழக்கமுடையவர். எனக்கு ஏதாவது உடம்பு சரியில்லை என்றால், டிமிக்கி கொடுத்துவிடுவேன். ஒரு வெள்ளிக்கிழமை வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து குளித்து கிளம்பியவர் அப்படியே உக்கார்ந்து கொண்டார். எனக்கு என்னமோ இன்று போகவேண்டாம் என்று தோன்றுகிறது என்று கூறியவரை நான் ஆச்சிரியமாக பார்த்தேன். சிறிது நேரத்தில் என்னுடைய தோழியிடமிருந்து ஒரு போன் , அவளுடைய கணவர் கீழே விழுந்து தலையில் நல்ல அடிபட்டு….. நாங்கள் கிளம்பி இருந்ததால் நொடி பொழுதையும் வீணாக்காமல் சென்று அவரை மருத்துவமையில் சேர்க்கமுடிந்தது. ஊருக்கு புதிதாக வந்திருந்த தோழிக்கோ வேறு யாரையும் தெரியாது, என் வீட்டுகாரரிடம் அப்போது செல்போனும் கிடையாது, அந்த வெள்ளிக்கிழமை நாங்கள் கோவிலுக்கு போயிருந்தால்…

          இதை பற்றி என் வீட்டுக்காரரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது, ‘அதுக்கெல்லாம்…எல்லோரையும் முழுமனதாக அன்பு செய்யும் நல்ல உள்ளம் வேணும்மா.’ என்று வழக்கம்போல் என்னை வெறுப்பேத்த ,

 நானும், “Opposite poles attract each other, நானும் நல்ல பிள்ளையா இருந்திருந்தால் நம் நிலமை என்னவாகியிருக்கும் என்று சிறிது யோசித்தீர்களா….. (அவர் கையை பிடித்து) இந்த நல்லவர் மேல் அளவுக்கதிகமாக மையல் கொண்டு , ஒரு கணம் கூட பிரியாதிருக்க நான் குற்றங்குறை உள்ள பேதையாக மாறி , தினம் பல ஏச்சு பேச்சுகளையும் தாங்கி வாழ்ந்துகொண்டிருக்கிறேன். இப்படிப்பட்ட என் கணக்கிலடங்கா தியாகங்களுடன் இந்த தியாகம் புதைந்து இருப்பதால் தான் நம்முடை பூமியை தியாக பூமி என்று சொல்கிறார்களோ என்னமோ.” என்ற பதிலில் ‘திருத்த முடியாத கேசுகளுடன் பேசினால் நேரம் தான் விரையம் என்று அயர்ந்து முறைக்க………

4 comments செப்டம்பர் 30, 2009

இந்த அண்ணன்களே இப்படித்தானோ

வகை :  கதை, சிறுகதை.    

              அதிகாலையிலே எங்கம்மா சுறுசுறுப்பாக எங்களையெல்லாம் தூங்கவிடாமல் பிராண்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களுடைய ஒரே ஒரு அக்காவுடைய ஒரே புத்திரனாகிய திருவாளர் சுந்தர் திருமணம் தான் இன்று.

                நாங்களும் இந்த நாளை ஆவலுடன் எதிர்பார்த்துகொண்டிருந்ததால் அம்மாவிற்க்கு பொது மன்னிப்பு வளங்கப்பட்டிருந்தது. இருந்தாலும் எதையாது சாக்கு சொல்லி கொஞ்ச நேரம் துங்கினால் நல்லது போல் தோன்றியதால் மெள்ள அண்ணாவின் அறையினுள் எட்டி பார்த்து அதிர்ந்துவிட்டேன். எப்போதும் எதையாது படித்து கொண்டு, பெரிய சிந்தனாவாதி மாதிரி யோசிக்கிறேன் என்று சதாகாலமும் சிடுமூஞ்சியாய் அலைபவன் சிகை அலங்காரத்தில் ஒன்றியிருந்தான். சரி அம்மாவுடைய வியாதி இவனையும் பாதித்து விட்டது என்று அப்பாவின் அறைக்குள் எட்டி பார்த்தேன்.

                அப்பாவின் அறை என்பதைவிட புத்தக கொடௌன் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.அவர் அப்போதைக்கு என்ன புத்தகம் படித்து கொண்டிருக்கிறார் என்று தெரியவெண்டுமென்றால் , அவருடைய நடவடிக்கையை ஒரு நிமிஷம் உற்று பார்த்தாலே கண்டுபிடித்துவிடலாம். எதற்கெடுத்தாலும் கெக்கே பிக்கே என்று சிரித்துகொண்டிருந்தால் ஏதாவது “சிரிப்பின் சிறப்பு” மாதிரி புத்தகத்தை படித்துகொண்டிருப்பார். சந்தையில் உள்ள பாகற்க்காய் எல்லாம் வீட்டிற்க்கு இடம்பெயர்ந்தால் “பாகற் காயின் பலன்” களை படித்திருப்பார். மூச்சை அடக்கி மூலையில் விறைப்பாக உட்கார்ந்திருந்தால் சந்தேகமேயில்லாமல் தியானம் சம்பந்தமாக யாராவது கொம்பு சீவிவிட்டிருப்பார்கள்.ம்.. மேஜையில் மெழுகுவர்த்தி எரிந்து கொண்டிருந்தது. பத்தடி தள்ளி அப்பா அமர்ந்து கண்களை விரித்து உருட்டி , மெழுகுவர்த்தியின் ஜூவாலையை மிரட்டி கொண்டிருந்தார். இப்ப நான் உள்ளே நுளைந்தேன் என்றால் என்னைப்போல் …. யாரும் இருக்கமாட்டார்கள்.

                     ஒன்பது மணிக்குத்தான் வீட்டிலிருந்து புறப்படுவதாக கூறியிருந்தார்கள். ஒரு நொண்டிச்சாக்கும் கிடைக்காததாலும், அஞ்சு மணிக்கே என் அம்மாவின் அலம்பல் ஆரம்பித்துவிட்டதை நினைத்து இனிமேல் புண்ணியமில்லை என்பதாலும், நானும் கிளம்ப ஆரம்பித்துவிட்டேன்.

                             ***************

                நானும், என்னுடைய அத்தை பெண்கள், சித்தி பொண்ணு என்று ஒருக் கூட்டமாக திருமணக்கோஷ்டியை மேய்ந்து பார்த்தும் , எங்களுக்கு பொழுது போக்க ஒருத்தரையும் பார்க்கமுடியவில்லை.  அதனால், எங்களுக்குள்ளே கடித்து குதறிக் கொண்டிருந்தோம். திடீரென்று சாந்தி என்னை நிமிண்டி, கண்ணை அசைக்க , அந்த திசையில் பார்த்தேன். என் அருமை அண்ணன், மாப்பிள்ளை தோழனாக மேடையில் ஏறியவன், லிட்டர் லிட்டராக மணப்பெண் தோழியிடம் வழிந்து கொண்டிருந்தான். அடப்பாவி அதுவும் இப்படியா பகிரங்கமாக பழகிப்பார்க்க கிழம்புவது!.

               கொஞ்சம் ஓரமாக போய்.. அண்ணாவை அப்படியே அமுக்கி, ஓரங்கட்டி,

 ”என்னாது இது?” என்றேன்.

 ”எது தங்கச்சி?” என்றான் காது வரை சிரித்து கொண்டு.

 ”ம்.. மண்ணாங்கட்டி”  என்றேன் கோபத்துடன்.

” மண்ணாங்கட்டி ஒழிக….” என்றான் விரைப்புடன்.

 ”ஜோக்கு?…மானம் போகுது .. அங்கப்பாரு ஒரு கும்பலே உன்னை பார்த்து சிரிக்குது “.

” ஹி…ஹி..  சரி சரி கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன். ஆனா…. தங்கச்சி வருங்கால அண்ணியை நல்லா பார்த்துக்கோ.” என்று ஒரு பிட்டை போகிறப் போக்கில் போட்டான்.

                          *******************

             இனிதே கல்யாணம் நடந்த பிறகு, அண்ணாவின் முறை ஆனதால், அம்மா பெரிய வேட்டைக்கே தயாராகிவிட்டார்கள். அண்ணாவோ, ” அம்மா எனக்கு என்று தனியாக எந்த விருப்பமும் கிடையாது. உங்களுக்கும் முக்கியமாக தங்கச்சிக்கும் பிடித்தால் போதும் ” என்றான். என்னை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு வேற.

                ஆனால் அப்பாவி அம்மாவோ அந்த டயலாக்கில் ஐஸ்க்கிரீமாக உருகி, அதை வேற எல்லாரிடமும் சொல்லி பெருமைபட்டுக்கொண்டார்கள்.படிப்பு முதற்கொண்டு நிறைய விஷயங்களில் அண்ணன் பெரியக் கில்லாடியாக இருப்பதை முதன் முறையாக அறிந்துகொண்டேன். இந்த காதல் கத்திரிக்காய்களில் எல்லாம் ரெம்ப நம்பிக்கை இல்லாவிட்டாலும், திடீரென்று சுனாமி போல் வந்து அண்ணனை கன்னா பின்னாவென்று தாக்கியதை பார்த்தபிறகு, நமக்கும் அந்த தொற்று வியாதி ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வதென்று ஒரு முன்னெச்சரிக்கை காரணமாக நான் அமைதியாக இருந்தேன்.

           அப்பா கரும சிரத்தையாக யோகாவில் ஐக்கியமாக இருக்க, அம்மா பெண்களின் ஜாதகத்தை பலவாறாக அலசி ஆராய்ந்து கொண்டிருந்தார்கள். ஒரு நாள் நான் சுந்தர் அண்ணாவின் கல்யாண ஆல்பங்களை பார்த்தவாறு அம்மாவிடம் பேச்சு கொடுத்தேன். ” அம்மா அண்ணி பக்கத்தில் நிற்கிறாங்க பாருங்க, இவங்க பேரு கீதாவாம். இஞ்சினியரிங் முடிச்சிருக்காங்க. அழகாகவும் இருக்கிறாங்க, குணசாலியாகவும் தெரிஞ்சாங்க. அங்கங்கே பார்க்கிறதுக்கு, அண்ணிக்கிட்ட பேசி… இவங்களையே நம்ம அண்ணாவுக்கு முடித்தால் என்ன?” என்று மெல்ல தூண்டிலை போட்டேன்.

                அம்மா கொஞ்ச யோசித்தாலும் ” உனக்கு பிடித்திரிந்தால் பேசி பார்க்கிறேன்” என்றார்கள். அண்ணாவுடைய கண்கள் டிவியை பார்த்துக்கொண்டிருந்தாலும், காது ரெண்டும் எங்களுடன் தான் இருந்ததால், என்னை நன்றியுணர்ச்சியோடு பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். அப்புறம் விஷயம் எல்லாம் படு வேகமாக நடந்தது.

                  ************************

           மணமேடையில் இதோ எங்க அண்ணாவும் , கீதா அண்ணியும் மாலையும் கழுத்துமாக நின்று அசடு வழிந்து கொண்டிருந்தார்கள். அண்ணிக்கு எல்லாவிஷயமும் தெரியுமாததால் என்னை பாசத்தோடு தோழியாக நிற்கவைத்து கொண்டார்கள். நானும் அங்கு வந்தவர்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்திக்கொண்டு இருந்தேன்.

                        திடீரென்று அண்ணி முகத்தில் ஆயிரம் வாட்ஸ் வெளிச்சம் பரவியது.அவங்க ஒன்றுவிட்ட விசு அண்ணன் கடைசி நேரத்தில் பகவானின் கருணையால் லீவு கிடைத்து, மனதை கவரும், பளீரென்ற சிரிப்புடன் வந்து கொண்டிருந்தது தான் காரணம். அவரை பார்த்து கொண்டிருந்த நான் தற்செயலாக அண்ணாவை பார்த்தேன், அவன் என்னையே ஒரு மாதிரி பார்த்துகொண்டிருந்தான். ஒரு வேளை அண்ணியின் அண்ணாவை என்னையறியாமல் ஓவராக பார்த்துவிட்டோமோ. மனம் பதபதைத்தது. வலுக்கட்டாயமாக கூட்டத்தில் கண்களை திருப்பினேன்.

“வசந்திமா..”

“ம்…” அண்ணாவை நோக்கினேன்.

“நீ எவ்வளவு நேரமாக இங்கே நிற்கிறாய். அம்மாவையும் ஒரு எட்டு பார்த்துவிட்டு வா. தண்ணி , ஜூஸ் என்று ஏதாவது சாப்பிட வை சரியா”. என்று அங்கிருந்து கிளப்பினான் என் அருமை அண்ணன். எனக்கு எப்படி இருந்திருக்கும் நீங்களே சொல்லுங்க.

              என்ன ஒரு நன்றி கெட்ட உலகமடா என்று பெருமி.. பெருமூச்சு விட்டு கொண்டு கிளம்பினேன் நான்.

17 comments செப்டம்பர் 17, 2009

தண்ணீர்…. தண்ணீர்…….

                   தண்ணியப் பார்த்தாலே கண்மணிக்கு முகமெல்லாம் பளிச்சிடும்(எனக்கும் தான்). சிறு வயதில் சம்மர் லீவு முழுவதையும் தண்ணீரில் மேய்ந்தே அம்மாவை வெறுப்பேத்துவோம். அதனால் கண்மணியை பார்க்க எனக்கு ரெம்பவே பாவமாக இருக்கும். இந்தத்தடவை ஏதாவது நீர்வீழ்ச்சிக்கு கண்டிப்பாக அழைத்து செல்ல வெண்டும் என்று ஒரு முடிவோட தான் ஊருக்கு சென்றேன்.

              ஒரு வழியா கொஞ்சம் டிக்கெட்டுகளை பிடித்து சென்றுவிட்டோம். குளிக்க போனா அழகான அறிவிப்பு கண்ணில் பட்டு மெய்சிலிர்க்க வைத்து விட்டது. என்ன இருந்தாலும் நாங்க எல்லாம்  rules and regulations  ஐ அப்படியே follow பண்ணுவோம்ல. சரி பிற்காலத்தில் உங்களுக்கும் பயன்படும் என்று உங்களுக்காக…

            ஜோர இருந்தது அருவி. தண்ணி தட தடன்னு விழும் போது எனக்கு தண்ணி கமகமண்ணு மணக்குற மாதிரி தெரிந்தது. குளிச்சிட்டு மேல வந்து பாத்தபிறகு தான் வாசனையின் ரகசியம் தெரிந்தது , அங்கயும்    நிறைய பேரு குளிக்கிறாங்க. அப்புறம் ஜாலியான ஒரு போட்டிங் என்று கண்மணிக்கு ஒரே கொண்டாட்டம்.

19 comments ஆகஸ்ட் 29, 2009

Previous Posts


அண்மைய இடுகைகள்

பக்கங்கள்

Blogs

அண்மைய மறுமொழிகள்

Blog Stats

Blogroll

 

நவம்பர் 2009
தி செ பு வி வெ ஞா
« அக்    
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

மேல்