Archive for ஜூன் 10th, 2008
வேலைக்கு போகின்றீர்களா
பெண்கள் வேலைக்கு போவது இப்போது தவிர்க்க முடியாத விஷயமாகிவிட்டது. கூட்டுக்குடும்பம் இல்லாவிட்டால் பிள்ளைகளை பார்த்துக்கொள்வதற்கு, தனியாக ஆயாவை வைத்துகொள்ளவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். அவர்களை தேர்ந்தெடுக்கும் போது சிறிது கவனம் எடுத்துக்கொண்டால் நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
அவர்களிடம் சிறிது மனதாபிமானத்தோடு பழகுவது ரெம்பவே அவசியம் ஏனென்றால் நாம் இல்லாத நேரத்தில் அவர்கள் தான் நம் குழந்தையின் தாய். அதை மனதில் நிறுத்தி நல்ல நம்பிக்கையுடன் கூடிய பாசமுள்ள உறவை வளர்த்துக்கொள்வது நம் குழந்தைக்கு நல்லது.
எனக்கு தெரிந்த ஒருவர் , வீட்டு வேலை செய்யும் பெண்ணையும், தன் குழந்தையையும் வீட்டினுள் வைத்து பூட்டிவிட்டு தான் வேலைக்கு போவார். அவ்வளவு நம்பிக்கை அந்த பெண்மேல். ஆனால் ஏதாவது விபத்து நடந்தால் நம் குழந்தையின் கதி என்னவாகும்? என்பதை யோசிக்கவில்லை.
ஒரு தோழி வீட்டிற்கு சென்றிருந்தேன். அவர் ஒரு மருத்துவர், கணவரும் மருத்துவரே. அவர்களுடைய ஒரு வயது குழந்தைக்கு ஆயா சாப்பாடு கொடுத்துகொண்டிருந்தார். அந்தம்மா முகத்தில் ஒரு சிரிப்போ, பாசமோ இல்லை. ஏதோ கொத்தனார் சிமென்ட் கலவையை எடுத்து சுவரில் பூசுவது போல், கரண்டியில் சிரியல் கலவையை எடுப்பதும் வாயில் அடைப்பதுமாக இருந்தார். இப்படி ஒரு சூழலில் வளரும் குழந்தை எப்படி சந்தோஷமாக இருக்கும்?
இன்னொரு ரகம் இருக்கின்றார்கள், கைகுழந்தை பொழுதுக்கும் தூங்கிகொண்டுதானே இருக்கும், ஆயாவுக்கு வேலையே இருக்காது அதனால , கொடுக்கிற காசுக்கு ஈடுசெய்வதற்கென்று பெரிய லிஸ்டு கொடுத்துவிட்டுபோவார்கள். எனக்கு தெரிந்த இன்னொரு பெண்மணி இந்த ரகம். அதனால் ஆயாவுக்கு பிள்ளையை பார்க்க நேரம் கிடைப்பதில்லை. பால் கொடுத்தபிறகு ஏப்பம் விடும்வரை தோளில் வைத்து தட்டி கொடுக்காததால் வந்தது ஆபத்து.
நம் குழந்தைக்கு நாம் தான் பொறுப்பு, அதை அறிவுடன் செயல்படுத்துவது நம் கையில் தான் உள்ளது.
1. சிரித்த முகத்தோடு இருங்கள். அவர்களையும் இருக்க சொல்லுங்கள்.
2. அவர்களுக்கு தேவையான சிறு உதவிகளை தயங்காமல் செய்யுங்கள்.
3. அவசரத்தேவைக்கு உங்கள் தொலைபேசி எண்ணையும், அருகில் இருப்பவர் தொலைபேசி எண்ணையும் கொடுத்து செல்லுங்கள்.
4. அடிக்கடி வீட்டிற்கு தொலைபேசியில் பேசுங்கள்.
5. எல்லாவற்றிற்கும் மேலாக குழந்தையின் நடவடிக்கையும் கவனியுங்கள். பயம், அடிக்கடி நோய் போன்ற அறிகுறி இருந்தால்,காரணத்தை ஆராய்ந்து, தேவையானால் உடனே ஆயாவை மாற்ற தயங்காதீர்கள்.
2 comments ஜூன் 10, 2008