Archive for ஆகஸ்ட் 11, 2008
தியேட்டர் கலாட்டா
நாங்கள் தோழிகளுடன் சேர்ந்து ஒரு பிரபல இளம் நடிகரின் திரைப்படத்தை பார்க்க சென்றோம். படம் முழுவதும் ஒரே சத்தம். யாரு டெசிபெல்லில் கத்துவது என்று ஹீரோவுக்கும் வில்லனுக்கும் ஒரே யுத்தம். அதன் நிமித்தம் எங்களுக்கு பிடித்தது பித்தம். யார் மீது குத்தம்? சே, என்ன இது எழுத வந்தது போய் ஒரே டி.ஆர் வசனமா வருது. சரி விஷயத்துக்கு வருவோம்.
படம் இப்படி எங்களை வில்லன் கம் ஹீரோவின் யுத்தம் ப்ளஸ் சத்தங்களால் அறுத்து கொண்டிருக்க, நாங்கள் படம் பார்ப்பதை நிப்பாட்டி விட்டு, அரங்கத்துக்குள் நடப்பதை வேடிக்கை பார்க்க தொடங்கினோம்.
எங்கள் முன் வரிசையில் இருந்த சில நண்பர்கள் பேசிகொண்டு இருந்தனர். அதை கவனித்த போது அவர்களும் அந்த திரைப்படத்தால் மிகவும் பாதிக்க பட்டிருப்பது தெரிந்தது. அதில் ஒருவன் அந்த நடிகரின் தீவிர காத்தாடி போல. அவன் மட்டும் அமைதியாக இருக்க மற்ற நண்பர்கள் படத்தில் தாங்கமுடியாத காட்சிகள் வரும்பொது எல்லாம் அந்த காத்தாடியின் மண்டையில் தட்டிகொன்டே ‘உன்னாலதானல இத எல்லாம் பாக்க வேண்டிருக்கு’, ‘என்னலாம் பேசுறான் (ஹீரொ)’, ‘எங்களால முடியவில்லைடா வா போவோம்’ இப்படி அந்த காத்தாடியிடம் கோபத்தை கொட்டிக்கொண்டிருந்தார்கள்.
நாங்கள் அதை கேட்டு சிரித்து கொண்டே இருந்தோம். நாங்கள்தான் படம் பார்ப்பதை நிப்பாட்டி விட்டோமே.
அப்பொழூது அந்த நண்பர்கள் அருகில் இருந்த சிறுவன் எதையோ கீழே விட்டு விட, கீழே குனிந்து தேட ஆரம்பித்தான் . சிறிது நேரத்தில் அவன் அம்மாவும் குனிந்து தேட பின், அப்பாவும் தேட இப்படி குடும்பமா அந்த இருட்டில் எதையொ தேட, இருக்கைகளும், தலைகளும் அசைய தொடங்கியது. ஏற்க்கனவே படத்தின் போக்கால் நொந்து வெந்து நூடுல்ஸ் ஆகி இருந்த கூட்டம்
அதை கவனிக்க தொடங்கியது. அப்பொழுது அந்த நண்பர்கள் கூட்டத்தில் ஒருவன்
“என்னடா மாப்பி, என்ன நடக்குது இங்க? “
” பாவம்டா, ரெம்ப நேரமா தேடுராவ , படத்தோட கதையையா தேடுராவ……, இன்னும் கிடைக்காம இருக்க….?” என்று வடிவேல் பாணியில் கூற, அரங்கமே கலகலத்தது.
டிக்கெட் காசை தொலைத்த வேதனையில் இருந்த நாங்களும், இதை கேட்டு வேதனையும் மறந்து சிரித்துவிட்டோம்.
(என் தோழியின் பதிவு )

அண்மைய மறுமொழிகள்