Archive for ஆகஸ்ட் 17th, 2008
விளையாட வெளியே போகணும்
வீட்டில் ரெம்ப போர் அடித்தது எனக்கு, ஒரே சுட்டி பையன் வாசு, அவனும் அவன் பங்குக்கு, சேட்டை பண்ணி என்னை வெறுப்பேற்றிகொண்டிருந்தான். பாவம் அவனும் தான் என்ன பண்ணுவான்.
நான் கொடுத்த சப்பாத்தி மாவை உருண்டு, புரண்டு பிசைந்து வீடெல்லாம் சப்பாத்தி சுட்டு வைத்தான். ஸ்கெட்ச் பென்னை வைத்து கை, கால், ஷோபா என்று பாரபட்சமில்லாமல் எல்லாவற்றிலும் படம் வரைந்து தள்ளினான்.படம் வரைய கொடுத்த தாளை தோரணங்களாக வீடு முளுக்க பறக்கவிட்டான்.
காலையில் வீட்டுக்காரரை அனுப்பிவிட்டு தினமும் இருவரும் மல்லுகட்டுவதிலேயெ பொழுது போகிறது. சில நேரம் கோபமாகவும், அழுகையாகவும் வரும், பேசாமல் இந்தியாவுக்கு ஓடிப்போய்விடலாம என்று தோன்றும். வெளிநாட்டு வாழ்க்கை இப்படி கொடுமையாக இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சரி இன்றைக்கு அவர் வந்தவுடன் வாசுவை எப்படியாவது வெளியே அழைத்து போகவேண்டும் என்று வேலையை பார்க்க ஆரம்பித்தேன்.
வாசுவை ரெடி பண்ணி, நானும் ரெடியாகி அவருடைய வருகைக்காக காத்திருக்க ஆரம்பித்தோம். இரவு எட்டு மணிக்கு சோர்வாக வந்தவரை பார்க்க பாவமாக இருந்தது, இனிமேல் வெளியே எங்கு போவது என்று கோபமும் வந்தது.
“ரெண்டு ஜீவன் வீட்டில் உங்களுக்காக உக்காந்திருக்கு என்று கொஞ்சமாச்சும் நினைப்பிருக்கா?” என்றேன் கடுப்புடன்.
“இருப்பதினால் தான் அம்மணி வீட்டிற்க்கு வந்தேன்” என்றார் அமைதியுடன்.
“வந்தா மட்டும் போதுமாக்கும். இவனிடம் நாள் முழுக்க மல்யுத்தம் செய்வது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?”
“கஷ்டமா….. அச்சச்சோ… மஸாஜ் ஏதாவது
பண்ணிவிடவேண்டுமா அம்மணி? கட்டளையிடுங்கள், காத்திருக்கிறேன்” என்று பவ்வியமாக குறுஞ்சிரிப்புடன் நின்றவரை பார்த்து சிரிப்பு வந்தாலும், இப்படியே இன்னும் எத்தனை நாள் ஏமாறுவது என்று, சிரிப்பை அடக்கி, முகத்தில் கஷ்டப்பட்டு கோபத்தை தங்கவைத்துகொண்டேன்.
முகத்தை இறுக்கி வைத்துகொண்டே வளைய வந்தேன். சாப்பாடு எல்லாம் முடித்து, வாசுவிடம் வழக்கம் போல் மல்லுக்கட்டி தூங்க வைத்த பிறகு, நானும் அவனுடன் படுத்துக்கொண்டேன்.
பக்கத்தில் வந்து படுத்தவர் ” என்னம்மா முகத்தை ஏன் இப்படி ரெண்டு அடிக்கு தூக்கி வைத்திருக்கின்றாய். கொஞ்சம் சிரியேன்“
“எனக்கு சிரிப்பு ஒன்றும் வரவில்லை“
முகத்தை சீரியஸாக வைத்து கொண்டு
“ஆங்… அப்படியா…. அப்படீனா கண்டிப்பாக சிரிக்ககூடாதுதான். “
“எதுக்குடா கல்யாணம் பண்ணிக்கொண்டேன் என்றிருக்கிறது“
சிரித்துவிட்டு “It’s too late”
இந்த நக்கல் விக்கலுக்கெல்லாம் ஒன்றும் குறைச்சலில்லை என்று மனதில் திட்டிக்கொண்டே
“எவ்வளவு நேரமா இந்த ரெண்டு ரூமுக்குள்ள நாங்க ரெண்டு பேரும் ஒடிப்பிடித்து விளையாடுவதாம், கொஞ்ச நேரம் வெளியே போனாததான் அவனுக்கும் நல்லாயிருக்கும் ….” என்று நான் என் உள்ள குமுறலை எல்லாம் அவரிடம் கொட்டித்தீர்த்தேன். “என்ன பதிலையே காணும் ” என்று எட்டிப்பார்த்தால் மனுஷன் அமைதியாக தூங்கிக்கொண்டிருக்கிறார்.
அடுத்த நாள் காலையில், வழக்கம் போல் ஆபீஸ் கிளம்புவதற்க்கு எல்லாவற்றையும் எடுத்து வைத்து கொண்டிருந்தேன். ஒன்றுமே நடக்காதது போல் ஆபீஸுக்கு கிளம்பியவரிடம் ,” இது உங்களுக்கே நல்லாயிருக்கா, நான் எவ்வளவு மனசு கஷ்டப்பட்டு நேற்றைக்கு உங்களிடம் பேசிக்கொண்டிருந்தேன், நீங்க என்னன்னா நல்ல குறட்டை விட்டு தூங்கிக்கொண்டுருந்தீய. எனக்கு எப்படி இருந்திச்சு தெரியுமா?” என்றேன்.
“ஓ.. ஆனா பாரும்மா , துங்கியதுக்கு என்னை குற்றம் சொல்லாதே அது உன்னுடைய தவறு ” என்று நமட்டு சிரிப்புடன் கூற, எனக்கு மறுபடியும் பி.பி எகிற தொடங்கியது.
“ஆங்.. அதுக்குள்ள கோபப்பட்டா எப்படி. காரணத்தை சொல்றேன் , தேன் போன்ற உன்னுடய இனிய குரலில் நீ பேச ஆரம்பித்தாலே போதும் எனக்கு தாலாட்டு பாடுற மாதிரி இருக்குது, அதனால தூங்கி விடுகிறேன் இப்ப சொல்லு அது என்னுடைய குற்றமா” .
நான் என்னத்த சொல்லறது. நல்லா பேசப் படிச்சிருக்காங்கய்யா என்றபடி அங்கிருந்து சிரித்துக்கொண்டே நகர்ந்தேன் நான்.
***************
இந்த ஊருக்கு வந்து இரன்டு மாதம் ஆகிவிட்டது. இன்று காலையிலே எனக்கு தாங்கமுடியாத தலைவலியும், காய்ச்சலுமாக பொழுது ஆரம்பித்தது. நல்ல வேளை இன்று அவருக்கு விடுமுறை ஆகையால், அவரும் வழக்கம் போல் ஒரு டயலாக் அடித்துவிட்டு “இன்னைக்கு நீ கட்டிலை விட்டு எழுந்திருக்ககூடாதும்மா. யாம் இருக்க பயம் ஏன். நானே எல்லாவற்றையும் பார்த்துகொள்கிறேன்” என்று களத்தில் குதித்தார்.
நேற்றுள்ள சாம்பார், ரசம், பொரியல் இருந்ததால், வாசுவைத்தான் கொஞ்சம் கவனித்துகொள்ள வேண்டும் என்றேன். நீ கவலையே படமல் போய் படு என்று என்னை படுத்துக்க அனுப்பிவிட்டார்.
தூக்கம் வரவில்லை, ஆனால் கண்ணை மூடி படுத்திருந்தேன். சிறிது நேரத்தில் இருவரும் பிஸியாக விளையாட ஆரம்பித்தார்கள். பின் டி.வி. பார்க்கும் சப்தம் கேட்டது. எல்லாமுமாக ஒரு மணி நேரம் கழிந்தபிறகு , ரகளை ஆரம்பித்தது.
“ஏன்டா ஒயரை பிடிச்சி இழுகிறா. இங்க வந்து ஒக்காரு”
“டேபிள் மீது ஏறாத விழுந்திடுவாய்”
“பட் பட்” என்று அடிவிழும் சப்தம், தொடர்ந்து “அம்மா… அம்மா..” என்று அழும் சப்தமும் கேட்டது. கொஞ்சம் நேர தாஜாவிற்கு பின் அமைதி நிலவியது.
சிறிது நேரத்தில் திரும்பவும் ஹிஸ்டீரியா வந்த மாதிரி கத்த ஆரம்பித்தார்.
“இந்தா ஒன்னோட டாய்ஸ் வச்சு விளையாடு , டெலிபோனை எதுக்கு எடுக்கிற”
“ஏண்டா இப்படி என் உயிரை வாங்குற. கொஞ்சம் தண்ணி குடிச்சா என்னவாம்”
கத்துவதும், அடிவிழும் சப்தமும், அழும் சப்தமுமாக மாலை வரை தொடர்ந்தது. எனக்கு தலைவலி அதிகமாகியதே ஒழிய குறைந்தபாடில்லை.
மெள்ள எழும்பி ஹாலுக்கு வந்தேன் . காத்து போன பல்லூன் போல இருந்த அவருடைய முகத்தை பார்த்து பாவமாக இருந்தது.
“ வாசுவை முடிந்தால் கொஞ்சம் வெளியே கூட்டி செல்லுங்கள்”
அவ்வளவு தான் அவுத்து விட்ட கன்று குட்டியாட்டம் குதித்தான் வாசு. இரண்டு பேரும் இரண்டு மணி நேரம் கழித்து புத்துணர்ச்சியுடன் வந்தார்கள்.
*****************
இப்பயெல்லாம் தினமும் மாலையில் எங்களை பக்கத்தில் உள்ள பார்க்கில் காணலாம்.
9 comments ஆகஸ்ட் 17, 2008