Archive for ஜூலை, 2011
சட்டி சுட்டதடா
வீட்டில் சமைக்கிறேனோ இல்லையோ வாரத்திற்க்கு ஒரு தடவை எனக்கு எப்படியாவது ஒரு தீக்காயம் இருக்கும். அதனால அடுப்பு கிட்ட போறதுன்னா எனக்கு இன்னமும் சின்னதா ஒரு பயம் உண்டு. அதற்க்காக இப்படி பயந்து…. இந்த பொண்ணு என்னத்த சமச்சி…. என்னத்த சாப்பிடுகிறாரோ அந்த பாவப்பட்ட மனுஷன் என்று ஏடாகூடமாக யோசிக்க மாட்டீங்கன்னு எனக்கு தெரியும். ஏன்னா நீங்க எல்லாரும் ரெம்ப நல்லவைங்க. ( அதையும் மீறி கன்னா பின்னான்னு ஆராய்ச்சி செய்பவர்களுக்கு என் கையால் சமைத்த சாப்பாடு வீடு தேடி வரும் ).
இப்படி ஒரு பயம் உள்ளே இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்ளாமல் அவர் மேலிருக்கும் அளவு கடந்த பிரியத்தால் அந்த பயத்தை துடப்பத்தை வைத்து துடைத்து எறிந்துவிட்டு வெற்றிகரமா சமைத்து கொண்டிருக்கிரேன்னாக்கும். (இது மாதிரி சுய தம்பட்டம் எனக்கு பிடிக்காது என்றாலும் .. என்ன செய்ய சில நேரங்களில் இதை எல்லாம் எழுத வேண்டியது இருக்கிறது. ஏன்னா வரலாறு ரெம்ப முக்கியமாச்சே.)
சரி அதை விடுங்க விஷயத்துக்கு வருவோம். இப்படி தீக்காயம் பட்டுச்சுன்னா அவசரத்திற்க்கு ஒரு மருந்து வீட்டில் வைத்து கொள்வது மிகவும் அவசியம் தானே. என்னுடையா அக்கா ஒருத்தங்க சமீபத்தில் டூ வீலரில் இருந்து விழுந்து விட்டார்கள். காலில் சைலன்சர் சுட்டு காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்தார்கள். ஒரு வாரமாகியும் காயம் குறையவில்லை. நல்ல வீக்கமும் வலியும் இருந்ததால் பள்ளிக்கு செல்ல மிகவும் அவதிபட்டு கொண்டிருந்தார்கள்.
அவங்க வேலை பார்க்கும் பள்ளி பக்கா கிராமம். அவங்ககிட்ட படிக்கும் ஒரு பெண் ‘என்னா டீச்சர் இப்படி ஒரு சின்ன காயத்தை தூக்கிட்டு இத்தனை நாளா வர்ரீங்க நான் ஒரு மருந்தை கொண்டு வராட்டுமா? என்று கேட்டிருக்கிறாள். இவங்க முதலில் தயங்கினாலும் .. போட்டு தான் பார்ப்போமே என்று ஒரு சின்ன பாட்டிலில் வாங்கி போட்டால்……. ஒரே நாளில் வீக்கம் குறைந்து விட்டது. அடுத்த நாள் புண் காய ஆரம்பித்துவிட்டது. நான்காவது நாள் புண் சுத்தமாக ஆறிவிட்டது. அவங்களுக்கு ஒரே ஆச்சரியம்.
அடுத்த நாள், இது என்ன மருந்தும்மா என்று கேட்டால் அந்த பெண் சிரித்து விட்டு.. “டீச்சர் இது மருதாணி எண்ணை. எங்கள் ஊரில் என்ன தீக்காயம் பட்டாலும் இதை தான் போடுவோம். உடனே ஆறிவிடும்” என்று கூறிவிட்டு அதன் செய்முறையும் விளக்கி இருக்கிறாள்.
சரி அந்த மருதாணி எண்ணையை எப்படி காய்ப்பார்கள் தெரியுமா? ரெம்ப ரெம்ப சுலபம் தானுங்கோ. தேவையான அளவு தேங்காய் எண்ணை ஒரு 100 மில்லி என்று வைத்து கொள்வோம், அதற்க்கு 1 கை அளவு மருதானி இலைகள் போதும். ( முடிந்தால் மருதாணியை கெட்டியாக அரைத்து கொள்ளலாம்).
அடுப்பில் சட்டியை காய வைத்து , அதில் எண்ணையை ஊற்றி நன்றாக காய்ந்தவுடன் மருதாணி இலைகளை (விழுதினை) போட்டு ,தீயை அணைத்து விடவும். அப்படியே இலைகளோடு ஆறவைத்து பாட்டிலில் ஊற்றி வைத்துவிட்டு தேவைப்படும் போது உபயோகபடுத்தலாம்.
தீக்காயம் மட்டும் இல்லைங்க… வென்னீர் கொட்டிருச்சி.. ஆவி அடிச்சிருச்சின்னு என்ன காயம் பட்டாலும் இதை உபயோகப்படுத்தலாம். (இந்த பதிவை படிப்பதற்க்கு வென்னீரே தேவலைன்னு சொல்லக்கூடாது).

அண்மைய மறுமொழிகள்